முகப்பு
இந்தியா

பள்ளி மாணவர்களின் புத்தக சுமையைக் குறைத்த தெலங்கானா அரசு: 5-ஆம் வகுப்பு வரை இனி வீட்டுப்பாடம் கிடையாது

பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தகச் சுமையைக் குறைத்து தெலங்கானா அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், தொடக்கக் கல்வியான 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை

Updated On : 20 ஜூலை 2017, 8:14 am IST
பகிர்:

பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தகச் சுமையைக் குறைத்து தெலங்கானா அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், தொடக்கக் கல்வியான 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் அளிக்கக் கூடாது என்றும் அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தெலங்கானா அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: முதலாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையில் 1.5 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. அதேபோல், 3-ஆம் வகுப்பிலிருந்து 5-ஆம் வகுப்பு வரை 2 கிலோவிலிருந்து 3 கிலோ வரையிலான புத்தகங்கள்தான் மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் 4 கிலோ வரையிலும், 8 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 4.5 கிலோ வரையிலும்தான் புத்தகங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் 5 கிலோவுக்கு மேல் புத்தக பைகளை சுமக்கக் கூடாது.
தற்போது தொடக்க நிலை கல்வி மாணவர்கள் 6 கிலோ முதல் 12 கிலோ வரையிலும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 17 கிலோ வரையிலும் புத்தகங்களை பையில் சுமந்து செல்வது தெரியவந்துள்ளது. இதுபோன்று அதிக எடையை சுமக்கின்ற காரணத்தினால் மாணவர்களுக்கு முதுகுத் தண்டு, மூட்டுகளில் பாதிப்பு ஏற்படவும், பயம் போன்ற உளவியல் பிரச்னைகளால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அதன்காரணமாகவே புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.