FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருணாநிதிக்கு கௌரவம்: நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது இதுவே முதல் முறையாம்!

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நாடாளுமன்றத்தில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:


புது தில்லி: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நாடாளுமன்றத்தில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத முன்னெப்போதும் பதவி வகிக்காத ஒருவரின் மரணத்துக்காக இரு அவைகளும் ஒத்திவைப்பது இதுவே முதல் முறை.

இந்திய அரசியலில் மிகப்பெரிய தலைவராக விளங்கிய கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில், நாடாளுமன்ற அவைகள் நேற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவைகளை ஒத்திவைக்க மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு பெரும் முயற்சி எடுத்தார். அதே சமயம், அவரது முயற்சிக்கு பிற கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

நாடாளுமன்ற எம்.பி.யாக இருப்போர் உயிரிழக்கும்போது மட்டுமே, அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இரு அவைகளும் ஒத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில், நாடாளுமன்ற அலுவல் புதன்கிழமை தொடங்குவதற்கு முன்பு, மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, பிற கட்சிகளின் மூத்தத் தலைவர்களுடன் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இரு அவைகளையும் ஒத்திவைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். 

அப்போது கருணாநிதி, தற்போது எம்.பி.யாகவும் இல்லை, அதேபோல் அவர் முன்னாள் எம்.பி.யும் கிடையாது என்றும், இந்நிலையில், அவையை ஒத்திவைக்கலாமா? என்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் வெங்கய்ய நாயுடு கருத்து கேட்டார்.

இதற்கு வெங்கய்ய நாயுடுவிடம், நாட்டின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர், ஆதலால் அவருக்கு இரங்கல் தெரிவித்து அவையை ஒத்திவைக்கலாம் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பதில் அளித்தனர். 

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமாரும், அவையை ஒத்தி வைப்பதை மத்திய அரசும் ஆதரிப்பதாக குறிப்பிட்டார்.

இவர்களின் கருத்து, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடமும் எடுத்துரைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மக்களவை புதன்கிழமை காலை தொடங்கியதும், கருணாநிதியின் மறைவு குறித்து உறுப்பினர்களிடம் சுமித்ரா மகாஜன் எடுத்துரைத்தார். பின்னர் கருணாநிதிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு, மக்களவையை நாள் முழுவதும் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, கருணாநிதிக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார். அப்போது அவர், கருணாநிதியை பன்முகத் தன்மை கொண்டவர் என்றும், வாழ்க்கையில் தொடர் பிரச்னைகளை எதிர்கொண்டு தலைவராக உயர்ந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

இதைத் தொடர்ந்து, கருணாநிதிக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு, மாநிலங்களவையை நாள் முழுவதும் வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார்.

இதேபோல், நாடாளுமன்ற எம்.பி.யாகவோ, அல்லது முன்னாள் எம்.பி.யாகவோ இல்லாத ஒருவருக்கு இரங்கல் தெரிவித்து, இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறை என்று நாடாளுமன்ற அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments