மாநிலங்களவை அலுவலில் பங்கேற்றார் அருண் ஜேட்லி
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்து வந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, மாநிலங்களவை அலுவலில் வியாழக்கிழமை கலந்து கொண்டார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்து வந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, மாநிலங்களவை அலுவலில் வியாழக்கிழமை கலந்து கொண்டார்.
இதுபோல் வெளிநிகழ்ச்சியில் ஜேட்லி கலந்து கொள்வது கடந்த 4 மாதங்களில் இதுவே முதல்முறையாகும்.
மாநிலங்களவை முன்னவராக இருக்கும் அருண் ஜேட்லி வசம், மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சக இலாகாக்கள் இருந்தன. இதனிடையே, கடந்த மே மாதம் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அவரது வசம் இருந்த மத்திய நிதி, பெருநிறுவனங்கள் விவகார அமைச்சக இலாகாக்கள் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டது.
இருப்பினும், அருண் ஜேட்லி இலாகா இல்லாத மத்திய அமைச்சராக நீடித்தார். மத்திய அரசுக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையிலும், சமூகவலைதளங்களில் தனது கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் விடியோ கான்பரன்சிங் மூலம் அவர் கலந்து கொண்டார்.
இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ஹரிவன்ஷுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மாநிலங்களவைக்கு ஜேட்லி வியாழக்கிழமை வந்திருந்தார். அவைக்கு ஜேட்லி வரும்போது, அவரை வரவேற்கும் வகையில் மேஜையை தட்டி எம்.பி.க்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் உள்ளிட்ட எம்.பி.க்கள் வாழ்த்தி வரவேற்றனர்.
அப்போது மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு குறுக்கிட்டு, பிற கிருமி தொற்றுகள் ஜேட்லிக்கு ஏற்படாமல் தடுக்கும் வகையில், அவரது அருகில் செல்லவோ அல்லது அவரைத் தொடவோ வேண்டாம் என்று எம்.பி.க்களை கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தேர்தல் நடந்து முடிந்து, ஹரிவன்ஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவரை மாநிலங்களவை துணைத் தலைவர் இருக்கை வரையிலும் ஜேட்லி அழைத்து சென்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.