FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மெளனம் சாதிப்பது ஏன்?: ஜெய்பால் ரெட்டி 

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

பெங்களூரு:  ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், பெங்களூரு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: 
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஃபிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்தியாவுக்கு தேவையான ரஃபேல் போர் விமானத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்திட திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், அந்த விமானத்தின் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு மாற்றும் நிபந்தனையும் அதில் விதிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் சார்பில் விமானத்தை கொள்முதல் செய்து, தொழில்நுட்பத்தை கைமாற்றிக் கொள்ளும் வேலையை பெங்களூரில் உள்ள பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல்-யிடம் வழங்கப்பட்டிருந்தது.  
ஆனால், 2015-ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்றிருந்த பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தத்தை எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து பறித்து தனது நண்பரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றினார். இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, 126 -க்குப் பதிலாக முதல்கட்டமாக 36 போர்விமானங்கள் வாங்கப்படுகிறது.
மேலும் இந்த விமானத்தின் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு அளிக்கப்படமாட்டாது. விமானத் தொழிலில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத, 12 நாள்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிறுவனத்துக்கு போர்விமான கொள்முதல் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது எப்படி?. தனது நண்பர் அனில் அம்பானிக்கு சாதகமாகவே பிரதமர் மோடி இந்த ஒப்பந்தத்தை தலைகீழாக மாற்றியுள்ளார். 
"ரஃபேல் போர் விமானங்களின் விலை முந்தைய ஒப்பந்தத்தை காட்டிலும் 9 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது' என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஆனால், அந்த விலையை பகிரங்கப்படுத்த அவர் மறுக்கிறார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் மெளனம் காத்து வருகிறார். இந்த மெளனத்தின் மர்மம் என்ன? என்று ஜெயபால் ரெட்டி கேள்வியெழுப்பி உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments