தாஜ்மஹாலுக்குள் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
தாஜ்மஹாலுக்குள் அமைந்துள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி கோரிய மனுவினை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புது தில்லி: தாஜ்மஹாலுக்குள் அமைந்துள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி கோரிய மனுவினை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் வளாகத்தில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. தாஜ்மஹாலைப் பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமையன்று வழக்கமான தொழுகையினை அங்கு நடத்துவது வழக்கம்.
ஆனால் தாஜ்மஹாலின் பாதுகாப்புக்கு இது இடையூறாக இருக்கலாம் என்ற தொல்லியல் துறையின் வேண்டுகோளை ஏற்று, உள்ளூர்வாசிகளை தவிர்த்து வேறு யாரும் அங்கு வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தக் கூடாது என்று, ஆக்ரா மாவட்ட நீதிமன்றம் இந்த ஆண்டு ஜனவரி 24 அன்று உத்தரவிட்டது.
Advertisement
இதனை எதிர்த்து 'தாஜ் மஹால் மஸ்ஜித் நிர்வாக குழு' என்ற அமைப்பின் சார்பாக அதன் தலைவர் சையது இப்ராஹிம் ஹுசைன் சய்தி என்பவர் உச்ச நீதின்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதிகள் சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அடங்கிய அமர்வு முன்னிலையில் திங்களன்று விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது மனுதாரர் சையது இப்ராஹிம் தரப்பில், வருடம் முழுவதும் எத்தனையோ சுற்றுலாப் பயணிகள் தாஜ் மஹாலுக்கு வருகை தருகிறாரகள். எனவே அவர்கள் தொழுகை நடத்தக் கூடாது என்ற ஆக்ரா மாவட்ட நீதிமன்ற உத்தரவானது சட்ட விரோதமானது மற்றும் ஒரு தலைப்பட்சமானது என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் தாஜ் மஹால் உலக அதிசயங்களில் ஒன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு தொழுகை நடத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் வேறு இடங்களுக்குச் செல்லலாம் என்றும் கூறி , மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.