காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மதத்தின் பெயரால் வாக்களிக்குமாறு கோரப்பட்டிருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மதத்தின் பெயரால் வாக்களிக்குமாறு கோரப்பட்டிருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு வியாழக்கிழமை (இன்று) விசாரணைக்கு வரவுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 'ராஷ்ட்ரீய ஹிந்து சேனை' அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு, புதன்கிழமை பரிசீலனைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை பரிசீலனை செய்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் விஷ்ணு ஜெயின் ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மதத்தின் பெயரால் வாக்களிக்குமாறு கோருவதை உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தடை செய்து இதற்கு முன்பு உத்தரவிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, இந்த வழக்கில் வியாழக்கிழமை விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
என்ன சர்ச்சை?: காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அக்கட்சி உறுதி அளித்திருக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு எதிராக பிரமோத் முத்தாலிக் வழக்கு தொடுத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.