முகப்பு
இந்தியா

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல: கேரள அமைச்சர் பேட்டி

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல என்று கேரள அமைச்சர் கே .கே.சைலஜா தெரிவித்துள்ளார். 

Updated On : 17 அக்டோபர் 2018, 4:23 pm IST
பகிர்:

திருவனந்தபுரம்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல என்று கேரள அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காகத் புதனன்று திறக்கப்படுகிறது.  ஐந்து நாட்களுக்கு பிறகு 22-ம் தேதி நடை அடைக்கப்படுகிறது. 

சபரிமலைக்குப் பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் வரும் வாகனங்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள்  சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

Advertisement

சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1500-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் பம்பை அடிவார முகாம் பகுதியில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது போராட்டக்காரராகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு உண்டானது. 

அதைத் தொடர்ந்து அங்கிருந்த போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து அவர்களைக் கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல என்று கேரள அமைச்சர் கே .கே.சைலஜா தெரிவித்துள்ளார். 

சபரிமலை நிலக்கல் பகுதி போர்க்களமாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:

சபரிமலை போராட்டம்  உள்நோக்கம் கொண்டது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல. ஏன் என்றால் இறைவனின் முன்னால் ஆன் பெண் என்ற வேறுபாடு கிடையாது. அவர்கள் எவ்வாறு அங்கு பெண்களைத் தாக்கலாம்?  

இந்தப் போராட்டத்தின் பின்னணியில் முழுக்க முழுக்க அரசியலே உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதனை நாங்கள் நிறைவேற்றுவோம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.