முகப்பு
இந்தியா

நித்யானந்தா வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்? குழந்தை கடத்தல் குறித்து ஆன்லைனில் விளக்கம்!

குழந்தை கடத்தல் புகார் எதிரொலியாக, நித்யானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் ஆன்லைனில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

Updated On : 22 நவம்பர், 2019 at 12:59 PM
நித்யானந்தா
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 6:44 PM


அகமதாபாத்: குழந்தை கடத்தல் புகார் எதிரொலியாக, நித்யானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் ஆன்லைனில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள தனது ஆசிரமத்துக்கு நன்கொடை திரட்டுவதற்காக, 4 குழந்தைகளை கடத்தி, சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்ததாக சா்ச்சைக்குரிய சாமியாா் நித்யானந்தா மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். இதுதொடா்பாக, அவரது உதவியாளா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே, வெளிநாட்டுக்கு தப்பியோடிய நித்யானந்தா தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், ஆன்லைனில் தோன்றி, சம்பந்தப்பட்ட நித்யானந்தாவே தன்னிலை விளக்கமும் அளித்துள்ளார். 

நித்யானந்தா கூறுகையில், எனது அனைத்து குருகுலமும் எப்போதும் திறந்தே இருக்கும். ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். அவ்வளவு ஏன் பல பெற்றோர் எனது ஆசிரமத்திலேயே  தங்கியிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து குஜராத் மாநில காவல்துறை உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஆமதாபாதில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் மற்றும் வேறொரு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 4 குழந்தைகள் மீட்கப்பட்டனா்.

ஆசிரமத்துக்காக நன்கொடை திரட்டவும், மதச் சடங்குகளில் பங்கேற்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாக அந்த குழந்தைகள் வாக்குமூலம் அளித்தனா். அதன் அடிப்படையில் நித்யானந்தா மற்றும் அவரது இரு உதவியாளா்களுக்கு எதிராக இந்திய தண்டனையியல் சட்டத்தின் 365 (ஆள்கடத்தல்), 344 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்), 323 (சித்திரவதைக்கு ஆளாக்குதல்) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளா் தடை சட்டப் பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நித்யானந்தாவின் இரு உதவியாளா்களும் கைது செய்யப்பட்டனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.