ராஜஸ்தானில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 6 நாள்களில் 1 லட்சம் பேருக்கு வேலை!
ராஜஸ்தானில் நகர்ப்புறங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாக உள்ளாட்சித் துறைச் செயலர் ஜோகராம் தெரிவித்தார்.
இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்ட 6 நாள்களில் ராஜஸ்தானில் நகர்ப்புறங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாக உள்ளாட்சித் துறைச் செயலர் ஜோகராம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
இந்த திட்டம் குறித்து நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களிடையே மிகுந்த உற்சாகம் காணப்படுவதாகவும், பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் 3,83,639 பேரின் பெயர்கள் கொண்ட 2.45 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆறு நாள்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தேவைக்கேற்ப வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செப்.9ஆம் தேதி நகர்ப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு 100 நாள்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, பாரம்பரியம் பாதுகாப்பு, தோட்டங்களைப் பராமரித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சட்டவிரோத அடையாள பலகைகள், விளம்பரங்கள் மற்றும் பேனர்கள், சுகாதாரம் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.