எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கப் பயன்படுத்தப்படும் மத்திய புலனாய்வு அமைப்புகள்: பூபேஷ் பாகெல் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்க மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவரும் சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகெல் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்க மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவரும் சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகெல் குற்றம்சாட்டியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணமோசடி தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, தில்லி அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜராகியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சியினர் இன்று பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பாஜக அரசின் மீது காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அந்தவகையில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும் சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகெல், 'கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருகின்றன. எங்களை ஒடுக்க அந்த அமைப்புகள் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் இந்த நிகழ்வுகள் நடக்கக்கூடாது; நாங்கள் இதை எதிர்க்கிறோம்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகியுள்ள எங்கள் கட்சித் தலைவருக்கு எதிராக இன்று நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.