உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒத்திகை பார்த்தாரா அஃப்தாப்? அதிகாரிகள் தகவல்
உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்பே தன்னிடம் கேட்கப்படும் கேள்விக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று நன்கு ஒத்திகை பார்த்திருந்தார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புது தில்லி: புது தில்லியில், இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அஃப்தாப் பூனாவாலா, உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்பே தன்னிடம் கேட்கப்படும் கேள்விக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று நன்கு ஒத்திகை பார்த்திருந்தார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தன்னிடம் எந்தவிதமான கேள்விகள் கேட்கப்படலாம் என்பதை எதிர்பார்த்து, அந்த கேள்விகளுக்கு தான் எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே அவர் மிகச் சிறப்பாக ஒத்திகை பார்த்ததாக அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க.. மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பில் அவசரம் ஏன்?
விசாரணை நடத்திய அதிகாரிகள், அஃப்தாப் பற்றி வெளியிட்ட தகவல்களில், அஃப்தாப் சில கேள்விகளுக்கு மிக நம்பிக்கையோடு பொய்யைச் சொல்கிறார். கிட்டத்தட்ட பாபநாசம் திரைப்படத்தைத்தான் நினைவுபடுத்துகிறார். உணவு இடைவேளையின்போது, காவலர்கள் சிரித்தபடியே, அஃப்தாப்பைப் பார்த்து, ஏதேனும் படத்தைப் பார்த்துவிட்டு இந்தக் கொலையைச் செய்தாயா என்று கேட்டனர். அதற்கு, அவர் புன்னகைத்தார். இதன் அடிப்படையில், அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது என்கிறார்கள்.
Advertisement
Advertisement
மருத்துவக் கருவிகள் அஃப்தாப் உடலுடன் இணைக்கப்பட்டதுமே அவர் இருமிக் கொண்டே இருந்தார். இதனால், அவரது உடல் இயக்கங்களை இந்தக் கருவிகளால் சரியாக பதிவு செய்ய இயலாமல் போனது. அவர் பேசும்போது இருமிக் கொண்டே பேசியதால், அவர் உண்மையைத்தான் சொல்கிறாரா என்பதை கருவிகளால் பதிவு செய்து கண்டறிய முடியாமல் போனதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஷ்ரத்தா வாக்கர் பற்றி கேள்வி எழுப்பிய போது மட்டும் பதிலளித்த அஃப்தாப்பிடம் சில அழுத்தம் உணரப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கு சற்றும் பொருத்தமில்லாத சில கேள்விகளையும் அதிகாரிகள் கேட்டுப் பதிவு செய்துள்ளனர். அதாவது குடியரசுத் தலைவர் பெயர் என்ன, ஒரு படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தின் பெயர் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு அவரது உடல்நிலை மிகச் சாதாரணமாக இருந்துள்ளது.
இந்த சோதனை தொடங்குவதற்கு முன்பு, அஃப்தாப்பிடம் அதிகாரிகள் அவரது குடும்பத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர் எப்படி பதிலளிக்கிறார் என்றும் பதிவு செய்து கொண்டார்கள். அதன்பிறகுதான் சில நுணுக்கமான கேள்விகளை எழுப்பி, அப்போது அவர் அளித்த பதில் மற்றும் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் பதிவு செய்தனர்.
இந்த அனைத்து கேள்வி - பதில் விவரங்களையும் நிபுணர்கள் ஆய்ந்தறிந்து, பிறகு இறுதி அறிக்கையை தயார் செய்வார்கள்.
பத்ரியை தேடும் காவல்துறை
இந்த விவகாரத்தில் தற்போது பத்ரி என்ற நபர் மீது விசாரணை திருப்பப்பட்டுள்ளது. இவரைத்தான் அஃப்தாப் - ஷ்ரத்தா ஜோடி இமாசலில் சந்தித்துள்ளனர். இவர் தங்கியிருந்த குடியிருப்புக்குத்தான் இருவரும் பிறகு குடிபெயர்ந்தனர்.
இதில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால், பத்ரியும் இந்த வீட்டை மே மாதம் காலி செய்துள்ளார். கார் நிறுத்துமிடத்தில் பிரச்னை காரணமாக வீட்டை காலி செய்வதாகக் கூறியுள்ளார். அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை, பத்ரியின் வீட்டுக்கு அஃப்தாப் அடிக்கடி வந்து செல்வது பதிவாகியிருந்தது. எனவே, அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து காவல்தறையினர் தேடி வருகிறார்கள். ஒரு வேளை பத்ரியிடம் விசாரணை நடத்தினால், இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.