முகப்பு
இந்தியா

தந்தைக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கிய 17 வயது மகள்!

கேரளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, நாட்டிலேயே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

Updated On : 20 பிப்ரவரி 2023, 10:29 am IST
பகிர்:


திருச்சூர்: கேரளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, நாட்டிலேயே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

கேரளம் மாநிலம் திருச்சூரில் ஹோட்டல் நடத்தி வருபவர் பிரதீஷ்(48). இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவில் உள்ள ராஜகிரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.  

தந்தைக்கு தகுந்த நன்கொடையாளர் கிடைக்காததால், தந்தையின் உடல்நிலை, குடும்பத்தின் வறுமை, மருத்துவச் செலவு போன்றவற்றால் பரிதவித்த மகள் தேவானந்தா(17), தனது கல்லீரலின் ஒரு பகுதியை வழங்க தானம் செய்ய முடிவு செய்தார். 

Advertisement

இந்நிலையில், இந்திய உடல் உறுப்பு தான சட்டத்தின்படி, 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே, உடல் உறுப்பு தானம் செய்ய முடியும் என்பதால், அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. 

இதையடுத்து தனது தந்தைக்கு உறுப்பு தானம் செய்ய விதிவிலக்குக் கோரி, கேரள உயர்மன்றத்தில் தேவானந்தா மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், பிரதீஷ் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு, உடல் உறுப்பு தானம் செய்ய தேவானந்தாவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து தேவானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் அவருக்கு கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனது தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடித்த மகள், தனது உணவுப்பழக்கத்தை முற்றிலுமாக மாற்றினார். உள்ளூரில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு நாள்தோறும் சென்று மிகக் கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். இதன் பலனாக ஒரு மாதத்துக்குள் அவரது கல்லீரலில் படிந்திருந்த கொழுப்பு முற்றிலுமாக கரைந்தது. அவரது கல்லீரல் தானம் செய்வதற்கான சிறந்த நிலைக்கு தயாரானது. 

இதைனைத் தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி பிரதீஷ்க்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மகள் தேவானந்தாவின் கல்லீரலில் ஒரு பகுதியை எடுத்து அவரது தந்தைக்கு மருத்துவர்கள் பொருத்தினர். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தந்தையும் மகளும் உடல்நலம் அடைந்து வருகின்றனர். 

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், தேவானந்தா கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கியதால் பாதிப்பு ஏற்படாது. அவருக்கு தானமாக வழங்கிய கல்லீரல் அவரது தந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அவரது உடலில் கல்லீரல் வளர்ந்துவிடும் என தெரிவித்தனர்.  

தந்தையும், மகளும் நலமாக உள்ளதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், தேவானந்தாவின் செயலைப் பாராட்டி அறுவை சிகிச்சை செலவுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது. 

ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருந்த பிறகு, தேவானந்தா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார், மேலும், அவர் "பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக" கூறியுள்ளார். 

17 வயது சிறுமி தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, நாட்டிலேயே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

தேவானந்தாவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தபோது, எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக போராடியதற்காக சிறுமிக்கு பாராட்டு தெரிவித்தது. 

தேவானந்தாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.