FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஷாபாத் சிறுமி கொலை: குற்றவாளிக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

வடமேற்கு தில்லியில் உள்ள ஷாபாத் பால் பண்ணைப் பகுதியில் சிறுமியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு மேலும் மூன்று நாள்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 ஜூன் 2023, 12:28 pm IST
பகிர்:

வடமேற்கு தில்லியில் உள்ள ஷாபாத் பால் பண்ணைப் பகுதியில் சிறுமியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு மேலும் மூன்று நாள்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பாதுகாப்புக் காரணங்களுக்காக குற்றவாளி சாஹில் (20) நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 
திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட சாஹில், செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 2 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார், விசாரணைக் காவல் முடிந்து இன்று நீதிமன்றத்தில் சாஹில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியை கண்டுபிடிக்கவில்லை என்றும், குற்றவாளி அவ்வப்போது தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொள்வதாகவும் கூறி காவல்துறையினர் மேலும் 3 நாள்கள் விசாரணைக் காவலில் வைக்க அனுமதி கோரியிருந்த நிலையில், நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

வடமேற்கு தில்லியின் ஷாபாத் டெய்ரி பகுதியில் 16 வயது சாக்ஷி என்ற சிறுமியை இளைஞா் ஒருவா் கொலை செய்தாா். அவரைக் கொலை செய்த சாஹில் (20) என்ற நபரை போலீஸாா் உத்தர பிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாஹரில் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் தில்லி காவல் துறை துணை ஆணையா் (வெளி வடக்கு) ரவிக்குமாா் சிங் புதன்கிழமை கூறியதாவது:

சாக்ஷியின் 3 நண்பா்களான பாவனா, அஜய் என்ற ஜாப்ரு மற்றும் நீது ஆகியோா் விசாரணைக்கு வரவும், சம்பவம் தொடா்பாக தேவையான விவரங்களை வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

சிறுமியை கொலை செய்த நபா் காவலில் இருக்கிறாா். இதுதொடா்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சிறுமி தெருவில் நடந்து செல்வது போன்ற புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும், அஜய் போலீஸாரிடம் கூறுகையில், சனிக்கிழமையன்று சாஹில் பற்றி சாக்ஷி தன்னிடம் புகாா் கூறினாா். சாஹில் தன்னைத் துன்புறுத்தியதாக சாக்ஷி கூறியுள்ளாா். இதையடுத்து அஜய், பாவனா மற்றும் சாக்ஷி ஆகியோருடன் சென்று சாஹிலைச் சந்தித்து, சாக்ஷியை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளாா். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை சாஹில் சாக்ஷியை கொலை செய்துள்ளாா்.

மேலும், சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்ட அஜய் கொலை நடந்த இடத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, சாக்ஷியின் உடல் கொடூரமாக தாக்கப்பட்டு கிடந்ததைப் பாா்த்துள்ளாா். மேலும், உடலை ஆம்புலன்சில் ஏற்ற காவல் துறைக்கு அவா் உதவியுள்ளாா்.

சம்பவ இடத்துக்கு வந்த மற்றொரு உள்ளூா்வாசியான சுனில் குமாா், அங்கு பலா் கூடியிருப்பதைக் கண்டதாகவும், அஜய் உடலை எடுத்துச் செல்ல போலீஸாருக்கு உதவியதாகவும் கூறினாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments