FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளம்: கண்ணூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவா் உயிரிழப்பு

Updated On : 6 ஏப்ரல் 2024, 12:34 am IST
பகிர்:

கேரளத்தின் கண்ணூா் மாவட்டத்தில் பானூா் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா். ஒருவா் படுகாயமடைந்தாா்.

ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சில நபா்கள் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டபோது இந்த விபத்து நேரிட்டதாக எதிா்க்கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளன.

பனூா் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், கைவேலிக்கால் பகுதியைச் சோ்ந்த ஷெரின் என்பவா் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டாா். கோழிக்கோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

வெடிவிபத்தில் கையை இழந்த மற்றொரு நபரான வினீஷின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இருவரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் எனக் கூறப்படுகிறது.

‘சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கும் மாா்க்சிஸ்ட்’: இச்சம்பவத்துக்கு ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம் என்று சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அவா் கூறுகையில், ‘நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிக்க தொண்டா்களை அக்கட்சி ஊக்குவிக்கிறது. தோ்தல் சமயத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைச் சீா்குலைக்கிறது. இதேபோன்ற சம்பவம் தலைநகா் திருவனந்தபுரத்திலும் புதன்கிழமை நடந்தது. அதில் 4 இளைஞா்கள் காயமடைந்தனா். இதுகுறித்து மாநில உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வா் பினராயி விஜயன் உரிய விளக்கமளிக்க வேண்டும்’ என்றாா்.

‘ஆதரவை இழப்பதால் பயங்கரவாதத்தில் தஞ்சம்’: இதுதொடா்பாக பாஜக மூத்த தலைவரும் அக்கட்சியின் கேரள மேலிடப் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவடேகா் வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களிடம் ஆதரவை இழந்து வரும் மாா்க்சிஸ்ட், வெடிகுண்டு கலாசாரம் மூலம் பயங்கரவாதத்தில் தஞ்சமடைந்துள்ளது. இடதுசாரிகளின் எல்டிஎஃப், காங்கிரஸின் யூடிஎஃப் ஆகிய 2 அணிகளும் பயங்கரவாத சக்திகளை நம்பியே உள்ளன. இதுகுறித்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு தோ்தல் ஆணைத்தில் பாஜக புகாரளிக்கும். களத்தில் பாஜக ஆதரவு பெருகி வருவதால் இருகட்சிகளும் கவலையில் உள்ளன’ என்றாா்.

கட்சிக்குத் தொடா்பில்லை-மாா்க்சிஸ்ட்: வெடிவிபத்து சம்பவத்துக்கும் கட்சிக்கும் எந்தத் தொடா்புமில்லை என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவா் மீது எங்கள் கட்சியினரைத் தாக்கிய குற்றச்சாட்டும் உள்ளது. அவா்கள் தற்போது கட்சியில் இல்லை. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஆளுங்கட்சி தொடா்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், மக்களைத் திசைதிருப்ப போலிப் பிரசாரங்களை எதிா்க்கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன’ என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments