ஒரு உடலுக்கு இரு குடும்பங்கள் போராட்டம்: உதவிய நீல நிற நகச்சாயம்!
ஒரு உடலுக்கு இரு குடும்பங்கள் போராடிய நிலையில், அடையாளம் காண உதவியது நீல நிற நெயில் பாலிஷ்.
மேப்பாடி: கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதுவும் தெரியாமல், கண்கள் முழுக்க கலங்கி, மீட்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம் காண வந்திருந்தவர்களில் ஒருவர்தான் பிரெஸ்நெவ்.
வயநாடு மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி சவாலாக மாறியிருக்கிறது. காரணம், பல உடல்கள் உருகுலைந்து, அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறியிருப்பதே, உடுத்தியிருக்கும் ஆடை, உடலில் இருந்த காயத்தின் தழும்புகள், மச்சம் என ஏதோ ஒன்றை மட்டுமே நம்பி அது நமது உறவுதான் என கண்ணீரை சுமந்தபடி அடையாளம் காட்டிச் செல்கிறார்கள் பலரும்.
பிரெஸ்நெவ் கண்ணீருடன் காத்திருப்பது தனது 14 வயது மகள் அனாமிகாவின் உடலை அடையாளம் காணத்தான், இந்த நிலச்சரிவின்போது சூரல்மலையில் உள்ள தங்களது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது காணாமல் போனார்.
Advertisement
அவரைத் தேடி வந்த நிலையில், மலப்புரம் அருகே சாலியாற்றில் பாதி அழுகிய நிலையில், ஒரு சிறுமியின் உடல் கிடைத்திருப்பதாகவும், அவரை அடையாளம் காட்டுமாறு ஞாயிற்றக்கிழமை காலை, பிரெஸ்நெவ்வுக்கு தகவல் வந்தது.
விரைந்து சென்ற பிரெஸ்நெவ், அது தனது மகளின் உடல்தான் என்று கனத்த இதயத்துடன் அடையாளம் காட்டினார். அதற்குக் காரணம், அந்த சிறுமியின் கையில் வைக்கப்பட்டிருந்த நீல நிற நெயில் பாலிஷ்தான். சம்பவத்தன்று தனது மகள் இந்த நீல நிற நெயில் பாலிஷ் வைத்திருந்ததை தந்தை கூறி கதறி அழுதார்.
ஆனால், மற்றொரு குடும்பமும், சிறுமியை காணவில்லை என்று புகார் கொடுத்திருப்பதால் அவர்களும் வந்து அடையாளம் காட்டியபிறகே உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துவிட்டனர்.
கண்ணீருடன் பெண்கள் சிலர் வந்து உடலைப் பார்த்தனர். ஆனால், தங்களது மகள் நெயில் பாலிஷ் வைக்க மாட்டார் என்றும், ஆனால், ஆற்றில் ஊறியதால் நகங்கள் நீல நிறத்தில் மாறியிருக்கலாம் என்றும், அது தங்களுடைய மகள்தான் என்றும் கூறினர்.
இதனால் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. அவர்களுக்குள் ஆலோசனை செய்து, இரு தரப்பையும் முன்னிலையில் வைத்துக்கொண்டு, சிறுமியின் நகத்தை கீறிப்பார்த்தனர். அது நெயில் பாலிஷ்தான் என்று உதிர்ந்து வந்ததைப் பார்த்து உறுதி செய்தனர். உடனடியாக அந்த உடல் பிரெஸ்நெவ் மகள் என்று அடையாளம் காணப்பட்டு, மாரியம்மன் கோயில் அருகே சமுதாய இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
அங்கிருந்த பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார் அனாமிகா. இந்த சம்பவத்தின்போது, இவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து, அனாமிகா, அவரது பாட்டி மற்றும் அத்தை, அத்தையின் கணவர் என நான்கு பேர் காணாமல் போயினர்.