தடயங்களை அழிக்கவே மருத்துவமனை மீது தாக்குதல்: உண்மையை உடைத்த நீதிமன்றம்
கொல்கத்தா மருத்துவமனை மீது தாக்குதல், தடயங்களை மறைப்பதற்கே நடத்தப்பட்டதாக நீதிமன்றம் தகவல்
பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட கொல்கத்தா அரசு மருத்துவமனை, புதன்கிழமை நள்ளிரவு அடித்து, நொறுக்கப்பட்டதற்கு, சம்பவ இடத்திலிருக்கும் தடயங்களை அழிப்பதே என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது.
ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகம் ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு அடித்து நொறுக்கப்பட்டது. அப்போது, மருத்துவமனையின் மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்ததை சுட்டிக்காட்டியிருக்கும் கொல்கத்தா உயர் நீதிமன்றம், மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கையும் சிபிஐ வசம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளது.
கொல்கத்தா அரசு மருத்துவமனை மீதான தாக்குதல் சம்பவத்துக்கு, மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை கடுமையாக விமரிசித்திருக்கும் உயர் நீதிமன்றம், மாநில அரசின் ஒட்டுமொத்த செயலிழந்த நிலைமையே இது என்று குறிப்பிட்டிருந்தது.
Advertisement
அந்த மருத்துவமனையை மூடிவிடுங்கள், அதிலிருக்கும் அனைத்து நோயாளிகளையும் வேறு மருத்துவமனைக்கு மாற்றுங்கள், அதில் எத்தனை நோயாளிகள் இருக்கிறார்கள்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், மேற்கு வங்க காவல்துறையையும் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. ஒரு மருத்துவமனையையும் அதிலிருக்கும் காவல்துறையினரையே காக்க முடியவில்லையே? மாநில விவகாரத்துறை மீது கவலை ஏற்படுகிறது. பிறகு எப்படி மருத்துவர்கள் அச்சமில்லாமல் வேலை செய்ய முடியும்? என்றும் கேட்டுள்ளது.
திடீரென மருத்துவமனை வளாகத்தில் 7000 பேர் குவிந்திருக்கிறார்கள். தாக்குதல் தொடர்பான விடியோ கிடைத்துள்ளது. கண்ணீர் புகைக் குண்டுகளை காவலர்கள் வீசுகிறார்கள். இந்த தாக்குதலில் 15 காவலர்கள் காயமடைந்தனர். ஆனால், சம்பவம் நடந்த இடம் பாதுகாப்பாக இருந்துள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, திடீரென 7000 பேர் நடந்து அங்கு வந்திருக்க மாட்டார்கள். இந்த தாக்குதலின் பின்னணியை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.