FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கொல்கத்தா விவகாரம்: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட் 2024, 11:54 am IST
உச்ச நீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் விசாரணைை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தாவில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது வரை எந்தவிதமான விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்பது குறித்து வரும் வியாழக்கிழமைக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதிசெய்வதற்கும், மருத்துவமனைக்குள் தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் வருவோரிடமிருந்து, மருத்துவமனைகளைப் பாதுகாப்பதற்கும், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான ஓய்வு அறைகள் மற்றும் அவர்களுக்கு பணிபுரியும் அறைகள் ஆகியவை குறித்து நாட்டளவில், நெறிமுறைகளை உருவாக்கிக் கொடுக்க சர்ஜன் - மேஜர் ஆர்.பி. சரின் தலைமையில், தேசிய அதிரடிப் படையைச் சேர்ந்த 10 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது. இன்று காலை விசாரணை தொடங்கிய நிலையில், இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்னை அல்ல, ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்னை என்ற உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.மேலும், பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அந்த மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் பலத்த காயங்களுடன் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவா் கைது செய்யப்பட்டாா். எனினும் இந்தப் படுகொலையில் பலருக்கு தொடா்பிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் நிலவுகிறது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் நாடு தழுவிய மருத்துவா்கள் போராட்டத்துக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொல்கத்தாவில் சம்பவம் நடந்த அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் மீண்டும் பணியைத் தொடங்கும் வகையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments