முகப்பு
இந்தியா

படித்தவர்களும் சாதியைப் பின்பற்றுவது கவலையளிக்கிறது: கர்நாடக முதல்வர் சித்தராமையா!

படித்தவர்களும் சாதியைப் பின்பற்றுபவர்களாக இருப்பது கவலையளிக்கிறது என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Updated On : 24 ஆகஸ்ட் 2024, 7:35 pm IST
கர்நாடக முதல்வர் சித்தராமையா (கோப்புப் படம்)
பகிர்:

மதம் மற்றும் சாதியின் பெயரால் சமூகத்தில் சமத்துவமின்மை அதிகரிக்கிறது என்றும், படித்தவர்களும் சாதியைப் பின்பற்றுபவர்களாக இருப்பது கவலையளிக்கிறது என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காந்தி பவன் ஒருங்கிணைத்த ’காந்தி நினைவு நிதியின்’ 75 ஆம் ஆண்டு விழாவில் ‘21 ஆம் நூற்றாண்டு மகாத்மா காந்தி’ என்ற சர்வதேச கருத்தரங்கை இன்று துவக்கி வைத்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “சாதி முறையால் பலருக்கும் கல்வி மறுக்கப்பட்டது. இதனால், சமத்துவமின்மை அதிகரித்தது. தற்போது படித்தவர்களும் அதிகளவில் சாதி வெறியர்களாக இருப்பது கவலையளிக்கிறத.

சாதி ஏற்றத்தாழ்வை வளர்த்தவர்களால் தான் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார்.

Advertisement

Advertisement

காந்தியின் யோசனைகளும் வழிகாட்டுதல்களும் 20 ஆம் நூற்றாண்டுக்கானது மட்டுமல்ல. அவை, தற்போதும் பயன்படுபவை. காந்தி தனது வாழ்நாள் முழுக்க அமைதி, உண்மை, நீதி மற்றும் சகோதரத்தன்மையைப் போற்றினார்.

உலகம் முழுவதும் ஒருவரையொருவர் நேசிக்கும் பண்பை ஏற்றுக்கொண்டால், முழு சமூகமும் நிம்மதியாக இருக்க முடியும் என்று அவர் நம்பினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை நமது தேவைகளை நிறைவேற்றுகிறது, நமது பேராசையை அல்ல என காந்தி நம்பினார் என்று கூறிய சித்தராமையா, கேரளாவின் வயநாடு மற்றும் பிற பகுதிகளில் நடக்கும் சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கு மனிதனின் 'பேராசை' தான் காரணம் என்று தெரிவித்தார்.

பல படித்தவர்கள் சரியான அறிவியல் கல்வி இல்லாமல் மூடநம்பிக்கை மற்றும் ’கர்ம சித்தாந்தத்தை’ (விதி) பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், 850 ஆண்டுகளுக்கு முன்பு பசவண்ணாவும் (12 ஆம் நூற்றாண்டின் ஆன்மீகத் தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி) அவரைப் பின்பற்றுபவர்களும் ’கர்ம சித்தாந்தத்தை’ கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்தனர் என்று கூறினார்.

ஆனால், இன்றைய படித்தவர்கள் கர்மா என்ற கோட்பாட்டை நம்புவதுடன் சாதியைப் பின்பற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று சித்தராமையா வருத்தம் தெரிவித்தார்.

ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் பகுத்தறிவு வழியில் சமூகத்தையும், நாட்டையும் வழிநடத்தினார். அதே சமயம் அகிம்சையும், அனைவரையும் உள்ளடக்கிய வள்ர்ச்சியும் காந்தியின் வழிகளாக இருந்தன. இதை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் பணியை செய்ய வேண்டும் என்றும் சித்தராமையா கூறினார்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments