60 நாள்களுக்குப் பின் ஆக.3-ல் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! ஆனால்..பட்டியல்?
ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாகத் தகவல்...
கர்நாடகத்தில், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி புதிய அமைச்சரவை முழுவதுமாக விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதல்வராகப் பதவி வகித்து வந்த சித்தராமையா கடந்த மே மாதம் ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, கடந்த ஜூன் 3 அன்று டி.கே. சிவகுமார் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், டி.கே. சிவகுமாரின் அமைச்சரவை முழுவதுமாக நிரப்பப்படாததால் பல்வேறு முக்கிய துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Advertisement
Advertisement
இதுபற்றி, தில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோருடன் முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோர் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இதில், தில்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டம் மற்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆகியவற்றால் கர்நாடக அமைச்சரவைப் பட்டியலுக்கு ராகுல் காந்தியின் ஒப்புதல் கிடைப்பதற்குத் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடக அமைச்சரவையின் விரிவாக்கம் 90 சதவிகிதம் வரும் திங்கள்கிழமை (ஆக. 3) நடைபெற்றுவிடும் எனவும், பதவியேற்பு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, புதிய அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. ஆனால், இதுவரை பதவியேற்கவுள்ள புதிய அமைச்சர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இதுபற்றி, காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் கூறுகையில்,
“புதிய அமைச்சரவையில் இடம்பெறுபவர்களின் பட்டியல் பெரும்பாலும் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவின்போதுதான் தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.
It has been announced that the new cabinet in Karnataka will be expanded on August 3.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.