நிதி முறைகேட்டில் 2-வது முறை ராஜிநாமா! கண்ணீர் விட்ட கர்நாடக அமைச்சர் நாகேந்திரா!!
ஊழல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட கர்நாடக அமைச்சர் நாகேந்திரா இரண்டாவது முறையாக தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
ஊழல் விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் பி. நாகேந்திரா, அமைச்சரவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பழங்குடியினத்தைச் சேர்ந்தவரான முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, கடந்த 2008 ஆம் ஆண்டு பாஜக சார்பிலும், அதனைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் சுயேச்சை வேட்பாளராகவும் குட்லிகி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர், 2018 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த அவருக்கு பெல்லாரி தொகுதி இரண்டு முறை தொடர்ச்சியாக சீட் வழங்கப்பட்டு அவர் வெற்றி பெற்றார்.
முதல்வராக சித்தராமையா இருந்த போது அவரது அமைச்சரவையில் பழங்குடியினர் நலன், விளையாட்டு துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா, கர்நாடக மகரிஷி வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.89 கோடி ஊழல் முறைகேடுகளில் தொடர்புடையதாக கர்நாடகத்தின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக, தொடர்ந்து கூறிவந்தது.
Advertisement
Advertisement
2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் கர்நாடக மகரிஷி வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரி சந்திரசேகரன் தற்கொலை செய்துகொண்ட பின்னரே ஊழல் குறித்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், 2024 ஆம் ஆண்டில் தனது பதவியை முதல்முறையாக ராஜிநாமா செய்தார் நாகேந்திரா.
அந்த முறைகேடு பற்றி அமலாக்கத்துறை, சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றது. விசாரணையின் ஒரு பகுதியாக நாகேந்திராவை, அமலாக்கத்துறை கைது செய்தது. 4 மாதங்கள் சிறையில் இருந்த அவர், கடந்த 2024 ஆம் ஆண்டு கடைசியில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் வற்புறுத்தலைத் தொடர்ந்து நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கர்நாடக அமைச்சர் நாகேந்திரா, தனது அமைச்சரை மற்றும் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தனது ராஜிநாமாவின் போது கண்ணீர் சிந்திய காட்சிகளை இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
சித்தராமையா பதவி விலகிய பின்னர், புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற டிகே சிவக்குமார் தலைமையில், நாகேந்திரா ஆக. 3 மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு, புள்ளியியல் துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது.
அமைச்சர் நாகேந்திரா பதவி விலக வேண்டும், விவசாயிகள் பிரச்சினை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் முன்னிறுத்தி செப். 1 முதல் 10 ஆம் தேதி வரை ராய்ச்சூரிலிருந்து பல்லாரி வரை 10 நாள் நடைப்பயணம் நடைபெறும் என்று கர்நாடக பாஜக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Congress leader B Nagendra has once again resigned from the Karnataka Cabinet amid the controversy over his alleged involvement in the Valmiki Corporation scam case.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.