முகப்பு
இந்தியா

பெனிசிலின் ஆன்டிபயாடிக் மருந்தை திரும்பப்பெறும் அபோட் இந்தியா!

ஒரு சில புகார்கள் காரணமாக பெனிசிலின் ஆன்டிபயாடிக் மருந்தை திரும்பப்பெறுகிறது அபோட் இந்தியா!

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 3:19 PM
மருந்து தயாரிப்பு - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 3:17 PM

மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட் இந்தியா, சில புகார்கள் எழுந்த நிலையில், தனது பெனிசிலின் ஜி-வகையான ஆன்டிபயாடிக் மருந்துகளின் சில பிரிவுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.

மாத்திரை வில்லைகளில் காற்று அதிகம் நிரப்பப்பட்டதுபோன்று இருப்பதால் மாத்திரைகள் திரும்பப்பெறப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட், தாமாகவே முன்வந்து, பெனிசிலின் மருந்தான பென்டிட்ஸ் 800, பென்டிட்ஸ் 400, பென்டிட்ஸ் 200 ஆகிய மாத்திரைகளின் விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருக்கிறது. இவை, புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்ட அகும் டிரக்ஸ் மற்றும் ஃபார்மாக்யூடிக்கல்ஸ் நிறுவனத்தின் (ஒப்பந்த அடிப்படையிலான தயாரிப்பு நிறுவனம்) மூலம் உற்பத்தி செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.

Advertisement

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 3:28 PM

பென்டிட்ஸ் மருந்துகள், பாக்டீரியா தொற்றுக்காக பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல், தொண்டை, மூக்கு, தோல் போன்றவற்றில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்படுகிறது.

பென்டிட்ஸ் மாத்திரைகள் வழக்கமானதை விட சற்று அதிகக் காற்று அடைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அவற்றை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதை நிறுத்துமாறு மொத்த விற்பனையகங்கள் மற்றும் மருந்துக் கிடங்குகளுக்கு அபோட் நிறுவனம் கடிதம் அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து உற்பத்தியாளர்கள் நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, மருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் அதில் கூறப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அதாவது, மாத்திரை வில்லைகள் இருக்கும் அட்டைகளில் காற்று அதிகம் நிரம்பி சற்று வீங்கியது போல இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 3:28 PM

மூன்றாம் தரப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் இது பற்றி கேட்டிருப்பதாகவும் உடனடியாக அந்தப் பிரிவு மருந்துகளை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த மாத்திரைகளை சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக எந்த புகாரும் இல்லை என்றும், இந்த நடவடிக்கை, அபோட் இந்தியா நிறுவனத்தின் மற்ற மருந்துகள் மற்றும் இதற்கு மாற்றாக இருக்கும் மருந்துகள் எதையும் பாதிக்காது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.