ஒவ்வொரு குடிமகனையும் காப்பது அரசின் கடமை: கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர்!
கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர்!
இந்திய கத்தோலிக்க பேராயர்கள் பேரவை சார்பில் இன்று(டிச. 23) ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மைய வளாகத்தில் மாலை 6:30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமர் இந்நிகழ்ச்சியில் தான் பங்கேற்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக பேசினார். அவர் பேசியதாவது, “உங்களுடன் நான் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது நம் அனைவருக்குமே மறக்க முடியாததொரு தருணமாக அமைந்துவிட்டது. சிபிசிஐ நிறுவப்பட்டு நிகழாண்டுடன் 80 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்நிகழ்ச்சி கூடுதல் சிறப்பினைப் பெறுகிறது. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனைக்காக சிபிசிஐ-க்கும் அதனுடன் சார்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!” எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உள்பட பிஷப்கள், கர்தினால்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும், அவர் பேசியதாவது, “அருட்தந்தை அலெக்சிஸ் பிரேம் குமார், போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் 8 மாதங்களாக தவித்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டது மிகுந்த மன நிம்மதியை தந்தது. அவரை பத்திரமாக அழைத்து வர, நமது அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. எங்களைப் பொறுத்தவரை இந்த நடவடிக்கை தூதரக ரீதியிலான ஒரு நடவடிக்கையாகக் கருதவில்லை, நமது குடும்பத்தை சேர்ந்ததொரு உறுப்பினரை மீண்டும் தாயகம் அழைத்து வருவதைப் போன்ற உணர்ச்சிப்பூர்வமான நடவடிக்கையாக அமைந்தது.
இந்தியர்கள் உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும், ஒவ்வொரு குடிமகனையும் காப்பதும் அவர்களை எவ்வித இடையூறுகளை சமாளித்தும் பத்திரமாக அழைத்து வருவது அரசின் கடமை. இதுவே இன்றைய இந்தியாவின் உத்வேகம்” என்றார்.