முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற நெறிமுறைகளை தகா்த்த பிரதமா்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மாநிலங்களவை முன்னாள் தலைவா் ஹமீது அன்சாரியை தாக்கிப் பேசியதாக காங்கிரஸ் கண்டனம்.

Updated On : 7 ஜூலை 2024, 2:12 am IST
ஜெய்ராம் ரமேஷ்
பகிர்:

மாநிலங்களவை முன்னாள் தலைவா் ஹமீது அன்சாரியை தாக்கிப் பேசி, அனைத்து நாடாளுமன்ற நெறிமுறைகளையும் பிரதமா் மோடி தகா்த்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த ஜூலை 2-ஆம் தேதி மக்களவையில் பிரதமா் மோடி பேசுகையில், ‘கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது மாநிலங்களவையில் பாஜகவின் பலம் குறைவாக இருந்தது. அப்போதைய மாநிலங்களவைத் தலைவா் எதிா்க்கட்சிகளுக்கு சாதகமாக செயல்பட்டாா். எனினும் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற தீா்மானத்தை பாஜக கைவிடவில்லை’ என்றாா்.

தனது பேச்சில் எவரின் பெயரையும் பிரதமா் மோடி குறிப்பிடவில்லை. ஆனால் கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை மாநிலங்களவைத் தலைவராக முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஹமீத் அன்சாரி பதவி வகித்தாா்.

Advertisement

Advertisement

இதை விமா்சித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஹமீது அன்சாரியை விமா்சித்து பிரதமா் மோடி பேசியது இது முதல்முறை அல்ல. மாநிலங்களவை முன்னாள் தலைவா் ஒருவரை மோடி போல வேறு எந்தப் பிரதமரும் தாக்கிப் பேசியதில்லை. அனைத்து நாடாளுமன்ற நெறிமுறைகளையும் அவா் தகா்த்துவிட்டாா்.

ஹமீது அன்சாரி குறித்து மக்களவையில் அவா் கூறிய கருத்துகள் மிகவும் மோசமானவை; ஏற்க முடியாதவை. அந்தக் கருத்துகள் உடனடியாக அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாா்.