முகப்பு
இந்தியா

வட மாநிலத்தை வதைக்கும் வெயில்: 143ஆக அதிகரித்த பலி!

வட மாநிலங்களில் வெயிலின் கொடூர தாக்குதலுக்கு நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

Updated On : 21 ஜூன், 2024 at 3:26 PM
வெயிலில் தற்காத்துக்கொள்ளும் மக்கள் - Center-Center-Delhi
பகிர்:

நாட்டின் பல பகுதிகளில் நீடித்துவரும் கொடூர வெப்பத் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே நிலவும் வெப்பத்தின் தாக்குதலுக்கு பலியும், பாதிப்பும் அதிகரித்து வருகின்றது. வெப்ப அலையை தாங்க முடியாமல் பலரும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

மார்ச் 1 முதல் ஜூன் 20 வரையிலான தரவுகளின் படி, கடுமையாக வீசிவரும் வெப்பத் தாக்குதலுக்கு இதுவரை 143 பேர் பலியாகியுள்ளனர். 41,789 பேர் வெப்பம் தொடர்பான பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.

Advertisement

குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலம் வெப்பத் தாக்குதலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடர்ந்து தில்லியில் 21, பிகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 17 இறப்புகளும் பதிவாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பால்யா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல பிரச்னைகளால் குறைந்தது 400 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களி்ல் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்.

அதில் ஒருசிலர் மாரடைப்பு, மூளை வாதம், வயிற்றுப்போக்கு காரணமாக மரணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வியாழக்கிழமை வெப்ப அலை நீடிக்கும் வரை மத்திய மருத்துவமனைகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும், கடந்த சில நாள்களாக வெப்பச்சலனம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா கடுமையான வெப்ப அலையின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் சிறப்புப் பிரிவுகளை அமைக்க மருத்துவமனைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் வெப்பத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தளர்வான ஆடைகள் உடுத்துமாறும் உடல் நீரிழப்பின்றி பாதுகாக்க அதிகப்படியான நீரை அருந்துமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மாநிலங்களில் இருந்து புதுப்பிக்கப்பட்ட தரவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், பலியும், பாதிப்பும் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.