குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் புதுமணத் தம்பதி, மணமகளின் தங்கை உள்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருமணத்துக்குப் பிறகு புதுமணத் தம்பதிகளான அக்ஷய் டோலாரியா, அவரது மனைவி கியாதி, கியாதியின் தங்கை ஹரிதா ஆகியோர் ராஜ்கோட்டின் விளையாட்டு மையத்திற்குச் சென்றனர். அப்போது அந்த விளையாட்டு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டு தீ பரவியது.
கனடாவில் படித்துவந்த அக்ஷய் (24), 20 வயதான கியாதியை திருமணம் செய்ய ராஜ்கோட் வந்துள்ளார். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சார் பதிவாளர் முன்னிலையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்,” அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு தீ விபத்தில் எரிந்தன. ஆனால், அதிர்ஷ்டவசமாக அக்ஷய்யின் உடல் அவர் அணிந்திருந்த மோதிரத்தின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டது. அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த கியாதி, ஹரிதாவின் பெற்றோரிடமிருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
வெறும் ரூ.99 டிக்கெட்டுகளுடன் வார இறுதி சலுகையால் விளையாட்டு மையம் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், விபத்துக்கான காரணம் ஆய்வுக்கு பிறகே தெரியவரும். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது பலியான 28 பேரில் 4 பேர் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள். இந்த சம்பவத்திற்குப் பிறகு, விளையாட்டு மையத்தின் உரிமையாளரும், மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
அதே நேரத்தில் மாநில அரசு விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்துள்ளது.
தீயணைப்புக்கான தடையில்லா சான்றிதழ் இல்லாமல் கேளிக்கை மையம் இயங்கி வந்ததாகவும், ஒரே ஒரு வெளியேறும் வழி இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேலிடம் பிரதமர் மோடி சனிக்கிழமை கேட்டறிந்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.