முகப்பு
இந்தியா

'தேர்வர்களின் ஜனநாயக உரிமைகளை சர்வாதிகாரத்தால் நசுக்க முடியாது' - ராகுல் காந்தி

தேர்வர்கள் மீதான உத்தர பிரதேச அரசின் அணுகுமுறைக்கு ராகுல் காந்தி கண்டனம்.

Updated On : 14 நவம்பர், 2024 at 4:25 PM
உத்தர பிரதேசத்தில் தேர்வர்கள் போராட்டம்
பகிர்:

உத்தர பிரதேசத்தில் தேர்வர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியதுடன் தேர்வர்கள் மீதான அணுகுமுறைக்கு உத்தர பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு, பிராந்திய குடிமைப் பணி (பிசிஎஸ்) தோ்வுகள் இரண்டு நாள்களாக நடத்தப்படுவதற்கும் தேர்வினை இரண்டு, மூன்று வேளைகளாக (ஷிப்ட்) நடத்தப்படுவதற்கும் எதிா்ப்பு தெரிவித்து தோ்வா்கள் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

பிரயாக்ராஜில் உள்ள உத்தர பிரதேச தேர்வாணையத்தை முற்றுகையிட்டு இன்றும் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதையடுத்து தேர்வர்கள், காவல்துறையின் தடுப்புகளை மீறிச் சென்று தேர்வாணையத்திற்குள் நுழைந்தனர். இதனால் அங்கு பதட்ட சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான, தேர்வர்கள் மீதான தாக்குதலுக்கு உத்தர பிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'தேர்வர்கள் மீதான உத்தர பிரதேச அரசு மற்றும் தேர்வாணையத்தின் அணுகுமுறை மிகவும் மோசமானது, துரதிர்ஷ்டவசமானது.

தேர்வை எளிதாக்குகிறோம் என்ற பெயரில் வெளிப்படைத்தன்மை இல்லாத அமைப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரே ஷிப்டில் தேர்வு நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது.

கல்வி முறையை சீரழிப்பதில் மும்முரமாக இருக்கும் பாஜக அரசின் கையாலாகாத்தனத்திற்கு மாணவர்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்?

'படித்துக்கொண்டிருந்த' மாணவர்கள் வீதியில் இறங்கி 'போராட' வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, தற்போது காவல்துறையால் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

தங்களுடைய மற்றும் தங்கள் குடும்பத்தின் கனவை நிறைவேற்ற, வீட்டை விட்டு வந்து வெளியில் தங்கி படிக்கும் இளைஞர்களுக்கு நடக்கும் இந்த அநீதியை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

தேர்வர்களின் கோரிக்கைகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். அவர்களின் ஜனநாயக உரிமைகளை சர்வாதிகாரத்தால் நசுக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.