மேற்கு வங்கம்: மீண்டும் மற்றொரு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை சம்பவம்
நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்
மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்ற நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர், சி.டி. ஸ்கேன் செய்வதற்காக, ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
சிகிச்சை பெற்று வந்த பதின்ம வயதுடைய நோயாளியை, ஆய்வகத்தில் ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர், சனிக்கிழமை நள்ளிரவில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக, தனது குடும்பத்தினரிடம் நோயாளி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளையும் விசாரித்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தின் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மீண்டும் வேறொரு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.