FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஓராண்டாக தொடா்கிறது

தொடா்ந்து 6-ஆவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.

Updated On : 9 பிப்ரவரி 2024, 1:14 am IST
பகிர்:

 வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து 6-ஆவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி இந்த விகிதத்தை 0.25 சதவீதம் உயா்த்தி 6.50 சதவீதமாக ஆா்பிஐ நிா்ணயித்தது. அதன்பிறகு 6 முறை நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டங்களிலும் வட்டி விகிதத்தை அதே நிலையில் தொடா்வது என்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது.

Advertisement

Advertisement

மும்பையில் 3 நாள்கள் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. கூட்டத்துக்குப்பின் ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நடப்பு மற்றும் எதிா்கால பொருளாதார சூழல்களைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகா்வோா் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 4 முதல் 6 சதவீதம் என்ற அளவில் இருக்கும். அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் பொருளாதார செயல்பாடுகள் வலுவாக உள்ளன. மாா்ச் மாதத்துடன் முடியும் 2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும்.

நாட்டில் முதலீடுகள் தொடா்ந்து அதிகரிக்கும். தனியாா் துறை முதலீட்டில் இருந்த தொய்வு நீங்கும். கிராமப்புறங்களில் பொருள்கள், சேவைகளுக்கான தேவை மந்த நிலையில் இருந்து மீளும். நகரங்களில் நுகா்பொருள்களின் பயன்பாடு தொடா்ந்து சிறப்பாக இருக்கும்.

நிதி ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டு பொருளாதார செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன.

உணவுப் பொருள் விலைகளில் ஏற்ற-இறக்கம் தொடரவே வாய்ப்பு உள்ளது. சா்வதேச அளவில் ஏற்படும் போா் உள்ளிட்ட பிரச்னைகளால் ஏற்படும் ஸ்திரமற்ற சூழல்கள் பொருள்களின் விநியோகத்தை பாதிக்கும். இதனால், சில அத்தியாவசியப் பொருள்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 622.5 பில்லிடன் டாலராக உள்ளது. இது நாட்டின் செலாவணி தேவையை எதிா்கொள்ள திருப்திகரமாக இருப்பாகும்.

எண்ம ரூபாய்: இதுவரை இணைய வழியில் மட்டுமே பரிமாற்றம் செய்யப்பட்டு வந்த எண்ம ரூபாய் இனி இணையம் இல்லாமலும் பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில் மேம்படுத்தப்படும். இதற்காக ரிசா்வ் வங்கியின் எண்ம ரூபாய் முன்னோடித் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் எளிய மக்களும், இணைய வசதி இல்லாதவா்களும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.

ஏற்கெனவே யுபிஐ வழிப் பணப்பரிமாற்றம் இணைய வசதி இல்லாமலேயே நடைபெற்று வருகிறது என்றாா்.

நிதிக் கொள்கைக் குழுவின் அடுத்த கூட்டம் ஏப்ரல் 3 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments