விஷம், பிளேடு, கத்தி.. குழந்தைகளைக் கொன்று பெற்றோர் தற்கொலை முயற்சி!
ஜோத்பூரில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான், ஜோத்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் மூன்று குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்று தம்பதியினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோத்பூர் மாவட்டத்தின் பலோடி தாலுகாவில் உள்ள கோலு பபுஜி கிராமத்தில் திங்கள்கிழமை இரவு இந்த கொடூர சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். வீட்டு வாயிலில் ரத்தம் வெளியேறிய நிலையில் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். மூன்று குழந்தைகளும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும், தம்பதியினர் இருவரும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர் தெரிவித்தார்.
இதையடுத்து பலோடி காவல் கண்காணிப்பாளர் பூஜா அவானா கூறுகையில்,
திங்கள்கிழமை இரவு ஷிவ்லால் அவரது மனைவி ஜட்னோ தேவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கொடூர சம்பவத்தை அவர்கள் செய்துள்ளனர்.
தம்பதியினர் முதலில் மகன் ஹரிஷ் (9), மகள்கள் கிரண் (5), நத்து (3) ஆகிய மூவருக்கும் விஷம் கொடுத்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பின்னர் மூவரின் கைகளிலிருந்த நரம்புகளை பிளேடால் அறுத்து, கத்தியால் அவர்களின் தொண்டையையும் அறுத்துள்ளனர். இதன் பின்னர், தம்பதியினர் தங்கள் கைகளில் உள்ள நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றனர்.
செவ்வாய்க்கிழமை காலை ஷிவ்லாலின் சகோதரனின் மனைவி வீட்டிற்கு வெளியே ரத்தம் ஆறுபோல் இருப்பதைக் கண்டு பயந்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் அளித்ததாகவும், அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
மயக்க நிலையிலிருந்த கணவன், மனைவியை போலீஸார் மருத்துவமனையில் சேர்ந்தனர். மேலும் அவர்கள் வீட்டிலிருந்த காலி விஷ பாட்டில், பிளேடு, கத்தி ஆகியவற்றையும் மீட்டனர்.
சம்பவம் தொடர்பாக போலீஸார் மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்து வருவதாகவும், தம்பதியினரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இறந்த மூன்று குழந்தைகளின் உடல்கள் பிணவறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.