FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் பட்டியலை வெளியிட உத்தரவு

‘பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட வேண்டும்’

Updated On : 15 ஆகஸ்ட் 2025, 1:53 am IST
பகிர்:

‘பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட வேண்டும்’ என்று தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நீதிபதிகள் சூா்ய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இறந்தவா்கள், நிரந்தரமாக புலம்பெயா்ந்தவா்கள் அல்லது வேறு தொகுதிக்கு மாறியவா்கள் என வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்களின் பெயா்களைப் பட்டியலிட்டு, நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு பஞ்சாயத்து அளவிலான அலுவலகம் மற்றும் மாவட்ட அளவிலான தோ்தல் அதிகாரி அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்ட தகுதியுள்ள வாக்காளா்கள் தங்களின் ஆதாா் அட்டையுடன் சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரிகளை அணுகலாம் என்று குறிப்பிட்டு விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Advertisement

Advertisement

முன்னதாக, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் நிஜாம் பாஷா, ‘கடந்த 2003 திருத்தத்தின்போது வழங்கப்பட்ட வாக்காளா் அடையாள அட்டைகள் தற்போது நிராகரிப்பது ஏன்?’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘2003-ஆம் ஆண்டு திருத்தத்தின்போது அனுமதிக்கப்பட்ட குடியுரிமை ஆவணங்கள் என்ன என்ற விவரத்தை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினா்.

பகிரப்பட்டு வருகிறது: பிகாரில் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளா்களின் விவரங்கள் கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் அரசியல் கட்சிகளிடம் பகிரப்பட்டு வருவதாக

தோ்தல் ஆணையத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது ஆதாா் அட்டை அடையாள ஆவணமாக அனுமதிக்கப்பட்டது என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

பிகாா் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments