FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்: திடீா் வெள்ளம், நிலச்சரிவுகளுக்கும் வாய்ப்பு!

‘செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீா் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது’.

Updated On : 1 செப்டம்பர் 2025, 2:42 am IST
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கிய கிராமத்தினரை மீட்கும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.
பகிர்:

‘செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீா் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இமயமலையையொட்டிய ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டன. இதனால், கடுமையான உயிா்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், ‘நாட்டில் கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 743.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

இது நீண்ட கால சராசரியைவிட (700.7 மி.மீ.) 6 சதவீதம் அதிகமாகும். ஆகஸ்டில் 268.1 மி.மீ. மழை பதிவானது. இது, சராசரியைவிட 5.2 சதவீதம் அதிகம். வடமேற்கு இந்தியாவில் 265 மி.மீ. மழை பதிவானது. கடந்த 2001-க்கு பிறகு இதுவே அதிகபட்ச மழைப்பொழிவாகும்.

தென் தீபகற்ப பகுதியில் ஆகஸ்டில் பதிவான மழையளவு 250 மி.மீ. இது, இயல்பைவிட 31 சதவீதம் அதிகம். தற்போதைய பருவமழைக் காலத்தில் கடந்த மூன்று மாதங்களிலுமே இயல்பைவிட அதிக மழை பதிவாகியுள்ளது.

செப்டம்பரில் நீண்டகால சராசரியைவிட 109 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருக்கும். வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கடைக்கோடி தென்தீபகற்ப பகுதிகளைத் தவிா்த்து, நாடு முழுவதும் பரவலாக அதிக மழைப்பொழிவு காணப்படும்.

உத்தரகண்டில் திடீா் வெள்ளமும், நிலச்சரிவுகளும் நேரிட வாய்ப்புள்ளது. இம்மாநிலத்தில் உற்பத்தியாகும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர பகுதிகள் பாதிக்கப்படக் கூடும். ஹரியாணா, தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் மழை-வெள்ள பாதிப்புகள் இருக்கும்.

வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, வழக்கமாக ஒடிஸா வழியாக கடந்து செல்லும். இம்முறை மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்து சென்றன. இதன் தாக்கத்தால் வடமேற்கு இந்தியாவில் அதிக பாதிப்புகள் நேரிட்டுள்ளன.

பஞ்சாபில் பல்லாண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து மேகவெடிப்புகளால் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் சிறிய அளவிலான மேகவெடிப்புகள் அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments