போதிய ஆதாரம் இல்லை! நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!!
போதிய ஆதாரம் இல்லை என்று கூறி, நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார்.
கேரளத்தில், முன்னணி நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், நடிகையின் கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பல்சர் சுனில் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் நடிகர் திலீப் 85 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஏ1 முதல் ஏ 6 வரை அதாவது சுனில் மற்றும் மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீ, பிரதீப் ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் டிச. 12 பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப் சேர்க்கப்பட்டிருந்தார். கைதாகி 85 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், திலீப் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
8 ஆண்டுகள் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் பல்வேறு ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்குச் சென்ற போது, நடிகையை ஒரு கும்பல் கடத்தி ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்து அதனை விடியோ பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து கேரள காவல்துறை விசாரணை நடத்தி, நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதில், நடிகையின் கார் ஓட்டுநர், உதவியாளர்களும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
விசாரணை முடிந்து இன்று வெளியான தீர்ப்பில், நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோரை போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுவித்தது. நடிகையின் உதவியாளராக இருந்த பல்சர் சுனில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Actor Dileep was acquitted in the actress sexual assault case, citing insufficient evidence.
இதையும் படிக்க.. தங்கம் விலை எவ்வளவு? இன்றைய நிலவரம்!