இந்தியாவில் 43 ஓடிடி தளங்கள் முடக்கம்! -ஏன் தெரியுமா?
இந்தியாவில் 43 ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டுள்ளது குறித்து...
இந்தியாவில், ஆபாச காட்சிகளை ஒளிப்பரப்பிய 43 ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டதாக, நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு இணையமைச்சர் எல். முருகன், ஆபாச உள்ளடக்கங்கள் கொண்ட காட்சிகளை ஒளிப்பரப்பிய 43 ஓடிடி தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஓடிடி தளங்களில் வெளியாகும் காட்சிகள் மற்றும் உள்ளடக்கங்கள் அனைத்தும் தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைக் குறியீடு) 2021 விதிகளின் 3 ஆம் பகுதியின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சட்டத்தால் தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களைத் தவிர்க்க வேண்டுமெனவும், வெளியிடப்படும் காட்சிகள் மற்றும் உள்ளடக்கங்களை வயது வரம்புகளுக்கு ஏற்ப வகைப்படுத்த வேண்டுமெனவும் ஓடிடி தளங்ளுக்கு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஓடிடியில் வெளியாகும் உள்ளடக்கங்கள் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் அனைத்தும் ஐடி விதிகளின் 2021 கீழ், சம்பந்தப்பட்ட ஓடிடி நிறுவனங்களுக்கு முறையாக அனுப்பப்படுவதாக, இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்க தேவையில்லை: 2026 இறுதிக்குள் புதிய சுங்கக்கட்டண வசூல் முறை அமல்!