சத்தீஸ்கரில் தாயின் சடலத்துடன் 20 நாள்கள் வாழ்ந்த இளைஞரால் பரபரப்பு
சத்தீஸ்கரில் இறந்த தாயின் சடலத்துடன் இளைஞர் 20 நாள்கள் வாழ்ந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் இறந்த தாயின் சடலத்துடன் இளைஞர் 20 நாள்கள் வாழ்ந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள குங்குரி பகுதியில் தனது தாயாருடன் வாடகை வீட்டில் பிரவீன் கால்கோ (25) வசித்து வந்தார். பழங்குடியின இளைஞரான இவர், தனியார் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
இந்த நிலையில் பிரவீன், தனது தாய் இறந்த பின்னரும் சுமார் 20 நாள்கள் அவரது சடலத்துடன் ஒரே வீட்டில் வாழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக வீட்டின் உரிமையாளர் போலீஸாருக்கு தகவல் அளித்த பிறகே இந்த சம்பவம் தெரிய வந்தது.
இதுகுறித்து குங்குரி நகர காவல் ஆய்வாளர் ராகேஷ் யாதவ் கூறுகையில், போலீஸார் சென்று பார்த்தபோது சபீனா கால்கோ என்ற வயதான பெண்ணின் உடல் படுக்கையில் கிடந்தது.
அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது படுக்கையின் அருகே சில மருத்துவ சீட்டுகள் கிடைத்தன. இதனால், டிசம்பர் 6ஆம் தேதி இறந்த தாய்க்கு மகன் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றிருக்கலாம் என்று தெரிய வருகிறது.
முதற்கட்டமாக, மகன் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது என்று தெரிவித்தார்.
போலீஸார் கூறுகையில், சபீனா கால்கோ பக்கவாதம் காரணமாக படுக்கையிலேயே இருந்ததாகவும், அவர்களுடன் உடனடி உறவினர்கள் யாரும் வசித்து வரவில்லை என்பதும் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்ததாக கூறினர்.
முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, இறப்பிற்கான காரணத்தை அறிய உடல் கூராய்வுக்கு அனுப்பப்பட்டது.
அதிகாரிகள் தரப்பில், தாயின் இறப்பிற்கு பிறகு அந்த இளைஞர் கடுமையான மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
“இது மிகவும் வினோதமான சம்பவம். தாயின் உடலை சுமார் 20 நாள்கள் வீட்டிலேயே வைத்திருந்தும் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அவருக்கு தற்கொலை மனப்பாங்கும் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.