மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் பலி! மருத்துவர்களின் அலட்சியத்தால் போராட்டம்?
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் உயிரிழப்புக்கு மருத்துவர்களே காரணம் என்று பெண்ணின் உறவினர்கள் போராட்டம்
மகாராஷ்டிரத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு மருத்துவர்களே காரணம் என்று பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாணே மாவட்டத்தில் கல்யாண் நகரில் பொது மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சையின்போது, பெண்ணின் குடும்பத்தினர் ஒப்புதலின்றி, பெண்ணின் கருப்பையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையில் அறுவைச் சிகிச்சையின்போது, அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, பெண்ணின் குடும்பத்தினர் ஒப்புதலின்றி, கருப்பை அகற்றியது மட்டுமின்றி, அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்படும் வகையில் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என்று கூறிய பெண்ணின் உறவினர்கள் செவ்வாய்க்கிழமைமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: அதானியின் ஊழலை மூடி மறைக்கும் பிரதமர் மோடி: ராகுல் காந்தி
மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கோரியதுடன், அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவிடும்வரையில், பலியான பெண்ணின் உடலை பெற மாட்டோம் என்று கூறினர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதுடன், மருத்துவ தடவவியல் அறிக்கை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கை வெளிவந்தவுடன் உண்மை வெளிவரும் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.