சத்தீஸ்கரில் சாலை கட்டுமானத்தில் முறைகேடுகள் நடப்பதாக கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தார் சாலை கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் என்பவருடனான பேட்டியில் பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் சில நாள்களுக்கு முன்னர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், ஜனவரி முதல் தேதியில் முகேஷை சுரேஷின் சகோதரர் ரித்தேஷ் சந்திக்குமாறு அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நீண்ட நேரமாகியும் முகேஷ் வீடு திரும்பாததால், அவரைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முகேஷை தேடி வந்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகேஷ், கடைசியாக சென்ற இடம் சுரேஷின் குடியிருப்புப் பகுதி எனத் தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டதில் ஒரு தண்ணீர்த் தொட்டியில் முகேஷ் சடலமாக இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரது உடலை மீட்ட காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர், சுரேஷின் சகோதரர் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.