யமுனை நதி விவகாரம்: கேஜரிவால் நேரில் ஆஜராக ஹரியாணா நீதிமன்றம் சம்மன்!
தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருப்பது பற்றி...
யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஹரியாணா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தில்லிக்கு தண்ணீா் வழங்கும் யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாகவும் அம்மோனியா எனப்படும் விஷம் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியதாகவும் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஹரியாணா முதல்வர் நைப் சிங் சைனி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க : நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை: கனடா ஆணையம் அறிக்கை
இந்த நிலையில், விஷம் கலப்பதாக பொய் கருத்து தெரிவித்து தில்லி மற்றும் ஹரியாணா மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக கேஜரிவால் மீது ஹரியாணா அரசு சோனிபட் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு தொடர்ந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி நேஹா கோயல், பிப். 17 ஆம் தேதி அரவிந்த் கேஜரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், ஆஜராகவில்லையெனில் எவ்வித கருத்தும் சொல்லவில்லை என்று கருதி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.