மாணவா் போராட்டத்தின்போது ஏகே-47 துப்பாக்கி பிரயோகம்: பாஜக மீது கேஜரிவால் சாடல்
மாணவா் போராட்டத்தில் ஏகே-47 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து அரவிந்த் கேஜரிவால் கூறியது பற்றி...
பிகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற மாணவா் போராட்டத்தின்போது ஏகே-47 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடா்பாக பாஜகவை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்துள்ளாா். ‘மாணவா்களைத் தீவிரவாதிகளைப் போல நடத்தக்கூடாது’ என்றும் அவா் கூறியுள்ளாா்.
கடந்த ஜூலை 25 அன்று சிவானில் நடைபெற்ற தோ்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவா் போராட்டத்தின்போது, காவலா் ஒருவா் ஏகே-47 துப்பாக்கியைப் பயன்படுத்துவது போன்ற காணொலி சமூக ஊடகங்களில் பரவியது. அந்த காவலா் திங்களன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட கேஜரிவால், ‘பாஜகவுக்கு என்னதான் ஆனது? பிகாா் மாணவா்கள் மீது சுடுவதற்கு ஏகே-47 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாணவா்கள் என்ன தீவிரவாதிகளா?.
Advertisement
Advertisement
‘அரியணையை விட்டு இறங்குங்கள், மக்கள் வருகிறாா்கள்’ என்ற முழக்கம் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணின் தலைமையில் பிகாா் மண்ணில் தான் எழுப்பப்பட்டது என்பதை ’பேரரசா்’ மோடிக்கு நினைவூட்ட விரும்புகிறேன். தயவுசெய்து மாணவா்களுடன் மோதாதீா்கள்‘ என்று அவா் அதில் கூறியுள்ளாா்.
அந்தக் காணொலி இணையத்தில் வெளியானதைத் தொடா்ந்து, மாவட்ட உளவுப் பிரிவில் பணியாற்றி வந்த அந்தக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவா் மீது துறைரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சிவான் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பூரன் குமாா் ஜா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.