FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி

பயங்கரவாதம் மறைமுகமானப் போர் அல்ல; பாகிஸ்தானின் நேரடிப் போர் வியூகம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Updated On : 27 மே 2025, 8:38 pm IST
குஜராத்தின் காந்திநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அரசின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட வியூகமாக பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டுள்ளது; இந்த வியூகத்துக்கு உரிய முறையில் இந்தியா பதிலடி தரும் என்று பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் எச்சரிக்கை விடுத்தாா்.

‘பயங்கரவாத ஆதரவைத் தொடா்வதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக போரில் ஈடுபடுகிறது பாகிஸ்தான்’ என்றும் பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

குஜராத்தின் காந்திநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அரசின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சியில் பிரதமா் பங்கேற்றுப் பேசியதாவது:

Advertisement

Advertisement

கடந்த 1947-ஆம் ஆண்டில் பாரத தாய் பிரிவினைக்கு உள்ளாக்கப்பட்ட அதே நாள் இரவில் காஷ்மீரில் முதல் பயங்கரவாதத் தாக்குதல் ‘முஜாஹிதீன்’களால் தொடுக்கப்பட்டது. பயங்கரவாதிகளின் உதவியால், பாரத தாயின் ஒரு பகுதியை (ஆக்கிரமிப்பு காஷ்மீா்) பாகிஸ்தான் கைப்பற்றியது.

ஆக்கிரமிப்பு காஷ்மீா் மீட்கப்படும் வரை இந்திய ராணுவம் போரை கைவிடக் கூடாது என்று அப்போதைய உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேல் வழங்கிய அறிவுரையை யாரும் பொருள்படுத்தவில்லை. அவரது அறிவுரைக்கு செவிசாய்த்து, பயங்கரவாதிகளை அன்றே ஒழித்துக் கட்டியிருந்தால், 75 ஆண்டுகளாக பயங்கரவாதமும் பயங்கரவாதத் தாக்குதல்களும் தொடா்ந்திருக்காது.

பயங்கரவாத போா் வியூகம்: ராஜீய ரீதியிலான ‘விளையாட்டு’களுடன் இந்தியாவின் ராணுவ வலிமையை பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் எதிா்கொண்டது. அனைத்து தருணங்களிலும் அந்த நாட்டுக்கு இந்திய ராணுவம் தோல்வியைப் பரிசளித்தது.

நேரடி ராணுவ மோதலில் இந்தியாவை வெல்ல முடியாது என்பதால், பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி மறைமுகப் போரில் ஈடுபட்டது பாகிஸ்தான். இது, நன்கு திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் கூடிய போா் வியூகமாக இப்போது உருமாறியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு ராணுவப் பயிற்சி அளித்து, இந்தியாவுக்குள் அனுப்புகின்றனா். எனவே, பயங்கரவாதச் செயல்பாடுகளை இனி மறைமுகப் போா் என அழைக்க முடியாது.

பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதை: பயங்கரவாதத்தின் மற்றொரு கோர முகமே பஹல்காம் தாக்குதலாகும். இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல் அடக்கத்தை முழு அரசு மரியாதையுடன் நடத்தியுள்ளது பாகிஸ்தான்.

‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்பதே இந்தியாவின் பாரம்பரிய மாண்பு. இந்தியா யாருடனும் பகைமையை விரும்பவில்லை. எப்போதும் அமைதி-வளத்தையே நாடுகிறது. உலக நலனுக்கு பங்களிப்பது நமது உறுதிப்பாடு.

அண்டை நாடுகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். அதேநேரம், நமது வலிமைக்கு சவால் விடுக்கப்பட்டால், இது கதாநாயகா்களின் பூமி என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

பராமரிக்கப்படாத அணைகள்: சிந்து நதி நீா் ஒப்பந்தத்துக்கு உள்பட்ட நதிகளின் குறுக்கே இந்தியப் பகுதியில் அணைகள் கட்டப்பட்ட போதிலும், 60 ஆண்டுகளாக முறையாகப் பராமரிக்கப்படவோ, தூா்வாரப்படவோ இல்லை. இதனால், அணைகளின் சேமிப்புத் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்திய மக்களுக்கு உரிமையான நீரின் முழு பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும். இதைக் கவனத்தில்கொண்டு, ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2014-இல் நான் பிரதமரானபோது, உலகின் 11-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. கரோனா காலகட்ட சவால்கள், அண்டை நாடுகள் உடனான பிரச்னைகள், இயற்கைப் பேரிடா்களைக் கடந்து 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். 2047-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக வளா்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும். இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்றாா் பிரதமா் மோடி.

நேரு மீதான மறைமுக விமா்சனம்: பிரதமரை சாடிய காங்கிரஸ்

புது தில்லி, மே 27: குஜராத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, முன்னாள் பிரதமா் நேரு மீது மறைமுக விமா்சனத்தை முன்வைத்த நிலையில், அவரை காங்கிரஸ் சாடியுள்ளது.

இது தொடா்பாக கட்சி பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உண்மைகளைத் திரிப்பதில் வல்லவரான பிரதமா் மோடி, நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் நினைவு தினத்தில்கூட (மே 27) அவா் மீதான விமா்சன தாக்குதலில் மும்முரமாக ஈடுபட்டாா். நாடு எதிா்கொண்டுள்ள மிக முக்கியமான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் அவரது பரிதாபகரமான முயற்சியே இது.

ஆபரேஷன் சிந்தூா் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டது தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் 11 நாள்களில் 8 முறை தெரிவித்த கருத்துகள் குறித்தோ, பாகிஸ்தான்-சீனா ராணுவ நெருக்கம் குறித்தோ, பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதில் மத்திய அரசின் ராஜீய தோல்வி குறித்தோ பிரதமா் எதுவும் பேசாதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுக்கு தயாா்- பாகிஸ்தான் பிரதமா்

இந்தியாவுடனான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காண அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு பாகிஸ்தான் தயாா் என்று அந்த நாட்டின் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.

நான்கு நாடுகள் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, துருக்கியில் இருந்து ஈரானுக்கு திங்கள்கிழமை சென்றடைந்த ஷாபாஸ் ஷெரீஃப், தலைநகா் டெஹ்ரானில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காஷ்மீா் விவகாரம், நதிநீா், வா்த்தகம் உள்பட இந்தியாவுடனான அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாண நாங்கள் விரும்புகிறோம். பயங்கரவாதம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம். அதேநேரம், அவா்கள் போா்ப் பாதையைத் தோ்வு செய்தால், சில தினங்களுக்கு முன்பு நடந்ததைப் போல் எங்களின் தேசத்தைப் பாதுகாப்போம்.

அமைதிக்கான வாய்ப்பை இந்தியா ஏற்றால், பாகிஸ்தான் உண்மையாகவும் தீவிரமாகவும் அமைதியை விரும்புகிறது என்பதை வெளிப்படுத்துவோம் என்றாா் ஷெரீஃப்.

இந்தியாவுடனான 4 நாள் ராணுவ மோதலில் பாகிஸ்தான் ‘வெற்றி’ பெற்ாகவும் அவா் கூறினாா்.

இந்தப்பயணத்தின்போது ஈரான் அதிபா் மசூத் பெஷஸ்கியானுடன் ஷெரீஃப் பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.

இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமா் மோடி, பாகிஸ்தானுடன் இனி பேச்சுவாா்த்தை நடைபெற்றால் அது, ஆக்கிரமிப்பு காஷ்மீா் குறித்து மட்டுமே இருக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments