சிறுமி வன்கொடுமை வழக்கில் மதபோதகர் ஆசாராம் பாபுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கி குஜராத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த மத போதகர் ஆசாராம் பாபு (83). இவர் ராஜஸ்தானில் தனது ஆசிரமத்தில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஜோத்பூா் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் சூரத்தைச் சோ்ந்த தனது பெண் சீடரை, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மற்றொரு வழக்கில், ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பளித்த குஜராத் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த நிலையில், சிறையில் உள்ள ஆசாராமுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இடைக்கால ஜாமீன் பெறப்பட்டது.
தற்போது, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இரைப்பை குடல் நோய்களால் ஆசாராம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறை மருத்துவமனையில் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க வசதி இல்லாததால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இலேஷ் ஜே வோரா மற்றும் நீதிபதி ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வு, 6 மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
மேலும், கூட்டங்கள் நடத்துவது, பிரசங்கங்கள் வழங்குவது போன்ற மத நடவடிக்கைகளில் ஈடுபட ஆசாராமுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர், தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, மருத்துவ காரணங்களுக்காக ராஜஸ்தான் உயர் நீதிமன்றமும் ஆசாராமுக்கு மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கிலும் 6 மாதம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.