தில்லியில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே கடந்த 10 ஆம் தேதி மாலை கடும் நெரிசலுக்கு மத்தியில் கார் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கார் வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து தொடர்புடையவர்கள் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் படித்த பல்கலைக்கழகமான அல்-ஃபலா பல்கலைக்கழகத்திலும் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வெடிகுண்டு சம்பவத்துக்காக காரை வாங்கிக்கொடுத்து அதனை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் உன் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஏற்கெனவே அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்டைச் சேர்ந்த 20 வயதுடைய ஜசிர் பிலால் வானி என்ற டேனிஷை என்ஐஏ அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர். இவர், ட்ரோன்களை இயக்குதல் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பதில் திறன்பெற்றவர் என்ற அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.
ஜசிர் பிலால் வானி என்பவர் தொழில்நுட்ப ரீதியாக தில்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு உதவியதும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயங்கரவாத சதித்திட்டங்களுக்கு உதவும் வகையில் ட்ரோன்களை சரிபார்த்தல், ராக்கெட்டுகளை வடிவமைத்தல் போன்ற பணிகளையும் ஜசிர் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் வெளியான தகவல்களின் அடிப்படையில், ஹமாஸ் பாணியில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தாக்குதலை நடத்தவும், இதனால், பலரை கொல்லவும் திட்டமிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் திட்டங்கள் தோல்வியடைந்ததால், கார் குண்டு வெடிப்பை செயல்படுத்த முடிவு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜசிர் பிலால் வானியும் அவரது சித்தப்பாவும், இயற்பியல் பேரசிரியருமான நசீர் அகமது வானியை என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றபோது, வானியின் தந்தை பிலால் அகமது ஞாயிற்றுக்கிழமை காலை என்ஐஏ அதிகாரிகள் முன்னதாகவே தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவர் திங்கள்கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.