டிட்வா புயல்: விமானம், கப்பல் மூலம் இலங்கைக்கு உதவும் இந்தியா!
உணவு, மருந்துகள், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை கப்பல்கள், விமானம் மூலம் மத்திய அரசு அனுப்பியது குறித்து...
டிட்வா புயலால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது.
இலங்கைக்கு அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளனர். 190 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து எந்தவித தகவலும் இதுவரை இல்லை எனத் தெரிவிக்கின்றனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கம்பளை - நுவரெலியா இடையேயான முக்கிய சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
மட்டக்களப்பு பகுதி முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அம்பாறை, கண்டி,கங்கொடை பகுதிகளில் தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 15,000 வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து இதுவரை 78,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த டிட்வா புயல், தெற்கு கடல் பகுதியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனினும் தெற்கு இலங்கையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவும் வகையில் மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி கப்பல்கள் மூலம் 4.5 டன் உலர் ரேஷன் பொருள்களும், 2 டன் குறுகிய கால பயன்பாட்டு ரேஷன் பொருள்களையும் அனுப்பிவைத்துள்ளது.
இதேபோன்று விமானப்படைக்குச் சொந்தமான ஏசி-130ஜே விமானத்தில் கூடாரங்கள், தார்பைகள், கம்பளிகள், நாப்கின்கள், உலர் பழங்களை அனுப்பிவைத்துள்ளது. மற்றொரு விமானத்தில் 9 டிரில்லியன் அவசரகால பொருள்களை அனுப்பியுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 80 வீரர்கள், அவசர கால கருவிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இலங்கை விமானப் படையுடன் இணைந்து தேடுதல் பணிகளில் ஈடுபடவும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் 2 ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்!