ஜம்மு - காஷ்மீரில் ராணுவ நடவடிக்கையில் 2 வீரர்கள் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!
ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் இருவர் மாயமாகியுள்ளது குறித்து...
ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில், ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 2 வீரர்கள் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தநாக் மாவட்டத்தில் கோக்கர்நாகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், நேற்று (அக். 7) ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அக்குழுவில் இருந்த 2 வீரர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்குள்ள வனப்பகுதியில் கடந்த 2 நாள்களாக, தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் அப்பகுதியில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வீரர்கள் மாயமான பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால், பனிமூட்டம் காரணமாக அவர்கள் இருவரும் தங்களது குழுவில் இருந்து பிரிந்து சென்றிருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இருப்பினும், ராணுவ வீரர்கள் இருவர் மாயமானது குறித்து ராணுவத்தின் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க: அமித் ஷாவை எப்போதும் நம்பாதீர்கள்: மோடியை எச்சரித்த மமதா!