முகப்பு
இந்தியா

தனியார் பள்ளி, கல்லூரிகளில் இடஒதுக்கீடு! ராகுல் வாக்குறுதி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ராகுல் காந்தி வாக்குறுதி...

Updated On : 25 செப்டம்பர், 2025 at 1:12 PM
ராகுல், கார்கே, தேஜஸ்வி
பகிர்:

ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு தனியார் பள்ளி, கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாட்னாவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, பாட்னாவில் நேற்று மாலை நடைபெற்ற ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நீதிக்கான வாக்குறுதி’ என்ற கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்படும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகளில் 30% இடஒதுக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ள ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:

”பாஜக எத்தனை பொய்கள் மற்றும் திசைத்திருப்பும் சதித்திட்டங்களை தீட்டினாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடி, சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான முழு உரிமையை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பிகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை வலுப்படுத்தவும், அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நீதிக்கான வாக்குறுதி’ அளித்துள்ளோம்.

இந்த சமூகத்தினருக்கு கல்விதான் முன்னேற்றத்துக்கான மிகப்பெரிய வழிமுறையாகும். கல்வித்துறையில் அவர்களுக்கான அணுகலை அதிகரிக்க சிறப்புத் தீர்மானங்கள் உள்ளன.

இனி தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும், தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் இபிசி சமூகத்தினரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும், மேலும் நியமனங்களில் "பொருத்தமானவர் இல்லை" என்று நியாயமற்ற நடைமுறைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

இது கல்வி மட்டுமல்ல, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டமாகும். இது சமூக நீதி மற்றும் சமமான வளர்ச்சிக்கான உண்மையான வாக்குறுதி” எனத் தெரிவித்துள்ளார்.

summary

Reservation in private schools and colleges: Rahul promises

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.