மேஜிக் செய்வதாக கூறி தங்க மோதிரம் திருட்டு: மகாராஷ்டிரத்தில் ஒருவர் கைது
மகாராஷ்டிரத்தில் மேஜிக் செய்வதாக கூறி தங்க மோதிரம் திருடிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் மேஜிக் செய்வதாக கூறி தங்க மோதிரம் திருடிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், பீமா ஜாதவர் என்பவர் மருத்துவ சிகிச்சை பெற புணே செல்வதற்காக கைஜ் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர், அதிசயத்தை காண விரும்புகிறீர்களா என்று அவரிடம் கேட்டுள்ளனர்.
தொடர்ந்து, இருவரும், ஜாதவர் அணிந்திருந்த தங்க மோதிரத்தை கழற்றி வெள்ளை நிறக் கைக்குட்டையில் வைக்குமாறு கூறியுள்ளனர். பின்னர் மேஜிக்கை பார்க்க கண்களை 10 நிமிடங்கள் மூடி இருக்குமாறு அவரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
அவர்கள் கூறியபடி ஜாதவரும் கண்களை மூடியிருக்கிறார். பிறகு திறந்து பார்த்தபோது, இருவரும் மோதிரத்துடன் மாயமாகி விட்டனர். குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ஜத் மதாரி என்பது தெரியவந்தது.
இந்தப் பகுதியில் இதுபோன்ற நூதன முறையில் திருடுவதில் பெயர்போன ஒரு கும்பலைச் சேர்ந்தவர் இவர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். தற்போது அம்ஜத் மதாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.