ரீல் தாய்மாமன் அல்ல, ரியல் தாய்மாமன்! தங்க மோதிரம் திட்டம் எப்போது? விஜய் தகவல்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பற்றி கரூரில் முதல்வர் விஜய் பேசியது...
வருகிற செப். 15 ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடங்கப்படும் என்று கரூரில் முதல்வர் விஜய் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக கரூருக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஜோசப் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசி வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில், தவெக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பற்றி பேசினார்.
Advertisement
Advertisement
"வருகிற செப். 15 ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் உங்கள் அண்ணனுடைய அரசில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடங்கப்படும். வாக்குறுதிகள் கொடுத்தார்களே என்ன ஆச்சு? என்று கேட்டார்கள். இப்போது அறிவிக்கிறோம். தீய சக்தி மாதிரி ரீல் தாய்மாமன் அல்ல, ரியல் தாய்மாமன்" என்று கூறினார்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
'தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட'த்தின்படி அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் விதமாக தாய்மாமன் சீர் என்ற முறையில் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் இந்த தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதுடன் ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளது. இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 22 (விஜய் பிறந்த நாள்) முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CM vijay announcement about Thaimaman Gold Ring scheme
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.