சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7-இல் இறுதி விசாரணை
உச்ச நீதிமன்றத்தில் வரும் ஏப். 7-ஆம் தேதி 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இறுதி விசாரணை...
சபரிமலை உள்பட மத வழிபாட்டுத் தலங்களில் மகளிருக்கு எதிரான பாகுபாடுகள் மற்றும் அனுமதி உரிமை ஆகிய விவகாரம் தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் வரும் ஏப். 7-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
ஹிந்து மதம் மட்டுமில்லாது பிற மதங்களையும் உள்ளடக்கி மத வழிபாட்டுத் தலங்களில் மகளிருக்கு எதிரான பாகுபாடுகளைக் குறித்த விசாரணையே மறுசீராய்வு மனுக்கள் மீதான உச்ச நீதிமன்ற இறுதி விசாரணையின் முக்கிய அம்சமாகும். மேற்குறிப்பிட்ட இறுதி விசாரணை அமர்வில் இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் பி. வி. நாகரத்னா, எம். எம். சுந்த்ரேஷ், அசானுதீன் அமனுல்லா, அரவிந்த் குமார், அகஸ்தீன் ஜார்ஜ் மாசி, பிரசன்னா பி. வராலே, ஆர். மகாதேவன், ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
முன்னதாக, கடந்த 2018-ஆம் ஆண்டின் செப்டம்பரில் அரசமைப்பு சாசன 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தவொரு உத்தரவைப் பிறப்பித்தது. 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்படும் இந்த நடைமுறை சட்ட விதிமீறல் மற்றும் அரசமைப்புக்கு புறம்பான பழக்கமாக அமைந்திருப்பதாக அது தொடர்பான மனுக்கள் மீதான விசரணையில் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
Advertisement
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019-ஆம் ஆண்டின் நவம்பரில், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மீண்டுமொரு 5 பேர் கொண்ட வேறொரு நீதிபதிகள் அமர்வு, நீதிபதிகள் பலர் அடங்கிய பெரிய அமர்வு முன்னிலையிலான விசாரணைக்கு இவ்விவகாரத்தை மாற்றி உத்தரவிட்டது.
சபரிமலை வழக்கு மட்டுமின்றி, அந்த நீதிமன்ற உத்தரவில் மசூதிகள் மற்றும் தர்காக்களில் முஸ்லீம் பெண்களுக்கு அனுமதி வழங்குதல், பார்சி இன பெண்கள் அவ்வினம் சாராத ஆண்களைத் திருமணம் செய்தல் ஆகிய விவகாரங்களையும் சுட்டிக்காட்டி பெரிய அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன்பின், கடந்த பிப். 16-இல், இவ்விவகாரத்தின் இறுதி விசாரணை ஏப். 7-இல் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. மேலும், விசாரணை ஏப். 22-இல் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.