மேற்கு வங்கத்தில் பாபர் மசூதியை பாஜக அனுமதிக்காது: அமித் ஷா
மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவது தொடர்பாக அமித் ஷா பேசியது குறித்து...
மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்ட பாஜக அனுமதிக்காது என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப். 14) தெரிவித்தார்.
முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதியை கட்டுவதாக முழக்கமிட்ட ஆம் ஜனதா உன்னயான் கட்சியின் தலைவர் ஹுமாயுன் கபீர் மமதா பனார்ஜியின் ஏஜெண்ட் எனவும் குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
Advertisement
அந்தவகையில் மேற்கு வங்கத்தின் கங்காராம்பூர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா இன்று (ஏப். 14) பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின்போது அமித் ஷா பேசியதாவது:
''ஹுமாயுன் கபீரை தன் பக்கம் வைத்துக்கொண்டு பாபர் மசூதியை மீண்டும் கட்டிவிடலாம் என மமதா பானர்ஜி நினைக்கிறார். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். பாஜக ஆட்சி அமைந்ததும் மேற்கு வங்க மண்ணில் மசூதி கட்ட அனுமதிக்கமாட்டோம்.
ஹுமாயுன் கபீர் மமதா பானர்ஜியின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். அவரை வைத்து செயல்படலாம் என மமதா நினைக்கிறார். ஆனால், மமதாவின் காலம் முடிந்துவிட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் தகுதி இல்லாத வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர். இதற்காக மமதா பானர்ஜி கவலை அடைகிறார். அவர் இனி கவலையிலேயே இருக்க வேண்டியதுதான். மக்கள் அவரை வழியனுப்ப தயாராகிவிட்டனர். நாட்டில் இருந்து அனைத்து ஊடுருவல்காரர்களையும் பாஜக வெளியேற்றும்.
எல்லையில் வேலி அமைக்க எல்லை பாதுகாப்புப் படைக்கு 600 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும், 45 நாள்களில் அதற்கான தீர்வுகளை பாஜக அரசு செய்யும்.
மாம்பழ விவசாயிகளுக்கு குளிர் பதனக் கிடங்கு கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. விவசாயிகளின் நலனுக்கு மமதா எதையும் செய்யவில்லை. பாஜக ஆட்சி அமைந்ததும் குளி பதனக் கிடங்குகள் கட்டப்படும்'' என அமித் ஷா பேசினார்.