வாட்ஸ்ஆப்பில் பெண்ணுடன் பேசியதாக சந்தேகம்! இளைஞர் மீது சிறுநீர் கழித்துக் கொடூரம்!
பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக சந்தேகப்பட்டதன்பேரில் இளைஞர் தாக்கப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டது தொடர்பாக...
ராஜஸ்தானில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக எழுந்த சந்தேகத்தின்பேரில், இளைஞர் தாக்கப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானினின் பார்மேர் மாவட்டத்தில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக சந்தேகப்பட்டதன்பேரில் இளைஞர் தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி நடைபெற்றதாகவும் அதில் தொடர்புடைய 2 நபர்களை காவலில் வைத்துள்ளதாகவும் மற்றவர்களைத் தேடிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல் அதிகாரி சத்யபிரகாஷ் விஷ்னோய் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரான தேவி சிங் (19), ஒரு பெண்ணுடன் வாட்ஸ்அப்பில் உரையாடியதாகவும், அது இரு குழுக்களுக்கு இடையே தகராறுக்கு வழிவகுத்து, பின்னர் வன்முறையாக மாறியதாகவும் தெரியவந்துள்ளது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிதேஷ் ஆர்யா கூறுகையில், “பாதிக்கப்பட்ட இளைஞரின் செல்போனில் ஒரு பெண்ணின் புகைப்படங்கள் இருப்பதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவனைப் பிடித்து, தாக்கி, அவன் முகத்தில் கரியைப் பூசியும், சிறுநீரைக் குடிக்கவும் கட்டாயப்படுத்தினர்” எனத் தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் வெளியான ஒரு விடியோவில், பாதிக்கப்பட்டவர் தரையில் அமர்ந்திருப்பதும் அவருடைய முகம் கறுத்துப்போன நிலையில் இருந்தது. சிலர் அந்தச் செயலைப் படம்பிடிப்பதும், அவரைக் கழிவுகளை உண்ணும்படி கட்டாயப்படுத்துவதும் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அடுத்தக்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மீதமுள்ள குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.