ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பேச்சு
மேற்கு வங்கத்தில் ஊழல் மற்றும் அரசாங்கத்தின் தோல்வியால் மக்கள் அவதியுறுவதாக பிரதமர் மோடி பிரசாரம்...
மேற்கு வங்கத்தில் ஊழல் மற்றும் அரசாங்கத்தின் தோல்வியால் மக்கள் நிர்கதியாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 26) குற்றம் சாட்டினார்.
மேலும், பாஜக ஆட்சி அமைந்ததும் மாநிலத்திலுள்ள ரெளடிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள் வேட்டையாடப்படுவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேற்கு வங்கத்திற்கு முதல் கட்டத் தேர்தல் ஏப். 23 ஆம் தேதி முடிந்த நிலையில், ஏப். 29 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரசாரத்திற்கு நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இதனிடையே வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்குட்பட்ட பாங்காவோன் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
''மேற்கு வங்கத்தில் நடந்துவரும் சட்டத்திற்கு புறம்பான காட்டு ஆட்சியில், பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அவர்கள் மிகப்பெரிய துரோகத்தை சந்தித்துள்ளனர்.
சந்தேஷ்காளியில் உள்ள நமது சகோதரிகள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. வார்த்தைகளால் அவர்கள் காயப்படுத்தப்படுகின்றனர். இந்த ஆட்சியில் இளம் பெண்கள் காணாமல்போகின்றனர். மே 4 ஆம் தேதிக்குப் பிறகு ஒவ்வொரு ரெளடியும் பாலியல் குற்றவாளியும் வேட்டையாடப்படுவார்கள்.
பாஜக ஆட்சி அமைத்ததும் பெண்களுக்கு பாதுகாப்பும் வாய்ப்புகளும் அளிக்கப்படும். பாஜக ஆட்சி அமைத்ததும் மேற்கு வங்க மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.36,000 வழங்கப்படும். பெண்களுக்கு அரசுப் பணிகளில் 33% இடஒதுக்கீடு வழங்கப்படும். பாஜகவின் டபுள் என் ஜின் ஆட்சியில் பெண்கள் டபுள் பலன்களைப் பெறுவார்கள்.
ஆஷா பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்திற்கு மிகப்பெரிய அறிவிப்பை மேற்கு வங்க பாஜக வைத்துள்ளது. ஒவ்வொரு மகளுக்கும், சகோதரிக்கும், தாய்மார்களுக்கும் ரூ. 5 லட்சம் மதிப்புடைய இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.
மார்பக புற்றூநோய், கருப்பைவாய் புற்றுநோய், தடுப்பூசிகள், பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். கருவுற்ற தாய்மார்களுக்கு ரூ. 21,000 வழங்கப்படும். மேற்கு வங்க விளையாட்டுத் துறைக்கு புதிய புத்துணர்ச்சியை பாஜக ஊட்டும். திரிணமூல் காங்கிரஸ் கட்சி விளையாட்டுத் துறையை சீரழித்துள்ளது. மேற்கு வங்கத்தில் தரமான, பாதுகாப்பான விளையாட்டுச் சூழல் உருவாக்கப்படும்'' என மோடி பேசினார்.